
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் பங்கு கொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க சேர்ந்து என்.டி.ஏ கூட்டணியாக உள்ளன. அ.தி.மு.க கூட்டணிக்குத் தனியாகப் பெயர் வைத்துள்ளதா எனத் தெரியவில்லை. பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. எனவே, கூட்டணி பற்றி கவலையில்லை.
பா.ம.க கட்சி தி.மு.க கூட்டணி வந்தால் வி.சி.க கட்சி தி.மு.க-வில் இருக்குமா என்பது மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்வி. அப்படி ஒரு நிலை வந்தால் கேட்கலாம்.
பா.ஜ.க, பா.ம.க இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எண்ணிக்கை பற்றி எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.
எண்ணிக்கை பற்றி கட்சியினரும் பேசியதில்லை. பிரச்னை வராது. நீங்கள் சொல்வதை வைத்து நாங்கள் பேச்சு வார்த்தையின்போது பார்த்துக்கொள்வோம். திரை உலகில் போதை கலாசாரத்தால் நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பற்றிக் கேட்கிறீர்கள். அது, அதிர்ச்சியான ஒன்று.
திரைத்துறையைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உண்மையில் அதிர்ச்சியான விஷயம். தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க வேண்டும். இதற்குக் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும்.

தனி உளவுப் பிரிவு இருந்தாலும் தனிப்படை அமைத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டும். தி.மு.க-வுக்கு என்ன சிக்கல் என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பெரியார், அண்ணாவைப் பற்றி இழிவாகச் சிறுமைப்படுத்தும், அவமதிக்கும் வகையில் வீடியோ ஒளிபரப்பப்பட்டது எதற்கு என அவர்கள்தான் சொல்ல வேண்டும். முருகன் பக்தர்கள் மாநாடு மோடி பக்தர்களின் மாநாடாகத்தான் நடைபெற்றது” என்றார்.