• June 26, 2025
  • NewsEditor
  • 0

இங்கே பூக்கள் இல்லாத பாதைகளே கிடையாது. சென்னை போன்ற மெட்ரோ பாலிட்டன் சிட்டியின் பேருந்து நிறுத்தங்களில்கூட, மண் மூடிய ஏதோவொரு சிறு செடியும் அதில் பெயர் தெரியாத ஒரு சிறு பூவும் இருக்கும். அந்தப் பூ மஞ்சள், ஊதா என ஏதோவொரு நிறத்தில் இருக்கும்.

Flowers changing its colour

பூக்களுக்கு சீசன் உண்டு. மல்லிகைக்கு ஒரு சீசன் என்றால், டிசம்பர் பூக்களுக்கு வேறு ஒரு சீசன். மல்லிகைகளின் நிறம் இதமான வெண்மை என்றால், டிசம்பர் பூக்கள் ஊதா, பிங்க், வெள்ளை, மஞ்சள் என பல வண்ணங்களில் இருக்கும். உலகின் உயிர்களுக்கு உணவளிக்கவே பூக்கள் பூக்கின்றன. சரி, பூக்கள் எப்படி பல வண்ணங்களில் பூக்கின்றன என்கிற கேள்வி எப்போதாவது உங்கள் மனதுக்குள் எழுந்திருக்கிறதா? அந்தக் கேள்விக்கான பதிலை இங்கே பகிர்கிறார் இயற்கை ஆய்வாளர், ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் கோவை சதாசிவம்.

”ஒரு மரம் எப்போதும் ஒரே நிறத்தில்தான் பூக்கும். உதாரணத்துக்கு, பொன் அரளியை எடுத்துக்கொள்வோம். அந்த மரத்தில் மஞ்சள் நிறத்தில் மட்டுமே பூக்கள் பூக்கும். செவ்வரளி மரத்திலோ இளம் ஆரஞ்சு நிறத்தில் பூக்கள் பூக்கும். அந்தந்த மரத்தின் மரபணுக்கள் தீர்மானிக்கின்றன இதை…

பொன் அரளி
பொன் அரளி

தவிர, மண்ணின் தன்மை, சூரிய ஒளி, சுற்றுச்சூழல் காரணிகளும் பூக்களின் நிறங்களில் சின்னச்சின்ன மாறுபாடுகளை ஏற்படுத்துகின்றன. இதனால்தான், ஒரே மரத்து பூக்கள் ஓர் இடத்தில் அடர் நிறத்திலும் வேறோர் இடத்தில் லேசான நிறத்திலும் இருக்கும். இதற்கு அந்தந்த இடங்களில் இருக்கிற மண்ணின் தன்மையே காரணம்.

மகரந்தச் சேர்க்கைக்காக, பூச்சிகளையும் வண்டினங்களையும் தங்களை நோக்கி ஈர்க்கத்தான், மரங்களும் செடிகளும் பல வண்ணங்களில் போட்டிப்போட்டுக் கொண்டு பூக்கின்றன. சரி, தேனீக்களும் வண்டினங்களும் எப்படிப் பூக்களை நாடி வருகின்றன? அதுவோர் அழகான தாவரவியல் கதை. எல்லா பூக்களிலும் புற ஊதா நிறமிகள் இருக்கும். இந்த நிறமிகளுக்கென்று ஒவ்வோர் அலை நீளங்கள் இருக்கும். இந்த அலை நீளங்களை தொலைவில் இருந்தே, பூக்களில் மகரந்தச்சேர்க்கை செய்கிற பூச்சிகளால் உணர முடியும்.

நிறம் மாறிக்கொண்டிருக்கும் பூக்கள்
நிறம் மாறிக்கொண்டிருக்கும் பூக்கள்

பல வண்ணங்களில் இருக்கிற பூக்கள் தங்களுக்கான மகரந்த சேர்க்கையாளர்களை், தங்கள் வண்ணங்கள் மூலம் ஈர்க்கின்றன. அப்படியென்றால், வெள்ளை நிறப்பூக்கள்…” என்று கேள்வி எழுப்பிய கோவை சதாசிவம், அதுபற்றியும் பேச ஆரம்பித்தார்.

”இரவுகளில் மலர்கிற பூக்கள் வெள்ளை நிறத்தில்தான் பூக்கும். பெரும்பாலான வெள்ளை நிறப்பூக்களில் வாசனையும் தூக்கலாகவே இருக்கும். அப்போதுதான் இரவாடிப் பூச்சிகளால் அவற்றில் மகரந்த சேர்க்கை செய்ய முடியும். பவழமல்லி மரத்தைப் பார்த்திருக்கிறீர்களா..? நடுநிசிக்குள் பூத்து, காலையில் தரையெல்லாம் உதிர்ந்துக் கிடக்கும். அதற்குள் இரவாடிப்பூச்சிகள் அதில் மகரந்தச்சேர்க்கை செய்திருக்கும். பப்பாளியில், ஆண் மரம் – பெண் மரம் என தனித்தனியாக இருக்கும். ஆண் மரத்தில் சின்னச்சின்ன வெள்ளை நிறப்பூக்கள் ஒரு கொத்தாக இருக்கும். பெண் மரத்திலோ, ஒற்றைப்பூக்களாக மீடியம் சைஸில் இருக்கும். பப்பாளி மரங்களில், இரவில் வவ்வால்கள் மகரந்தச்சேர்க்கை செய்யும்.

இரவுகளில் மலரும் வெள்ளை நிறப்பூக்கள்
இரவுகளில் மலரும் வெள்ளை நிறப்பூக்கள்

பூக்களின் வாழ்க்கையும் பூச்சிகளின் வாழ்க்கையும் ஒரு கூட்டு வாழ்வு முறை. ஒன்று இல்லையென்றால் இன்னொன்று இல்லை. இவற்றின் வாழ்க்கை கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு இலகுவாகத்தான் இருந்தது. அதன்பிறகு, பூக்களும் பூச்சிகளும் தங்கள் இயல்பான வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்றவர், அது என்ன போராட்டம் என்பதையும் விவரிக்க ஆரம்பித்தார்.

”பூமியில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போக, அதனால் வளி மண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் சிதைய ஆரம்பித்தது. விளைவு, சூரியக்கதிர்களின் பாதிப்பிலிருந்து தன் இனத்தை பாதுகாத்துக்கொள்ள, சில பூக்கள் தங்கள் நிறங்களை இன்னும் அடர்த்தியாக்கிக் கொண்டன. சில பூக்களோ தங்கள் நிறங்களை முன்பைவிட லைட்டாக மாற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. கடந்த 70 வருடங்களாக, பூக்கள் தங்கள் புற ஊதா நிறமிகளை வருடத்துக்கு 2 சதவிகிதம் என அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பூக்களின் புற ஊதா நிறமிகளை நம்மால் பார்க்க முடியாது என்பதால், அவற்றின் இந்த நிற மாற்றங்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், பூக்களின் புற ஊதா நிறமிகளின் அலை நீளங்களை உணர்ந்து மகரந்தச்சேர்க்கை செய்ய வரும் பூச்சி இனங்களுக்கு, பூக்களின் இந்த வித்தியாசம் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தும்.

கோவை சதாசிவம்
கோவை சதாசிவம்

தவிர, காலநிலை மாற்றங்களால், பூக்கள் பூக்கும் காலமும் மாறி வருகிறது. இதுவரை பூத்த காலத்துக்கு முன்னரே பூத்து விடுகிறது. அல்லது தாமதமாகப் பூக்கிறது. இதனாலும், மகரந்தச்சேர்க்கை செய்ய வரும் பூச்சிகள் ஏமாந்து விடுகின்றன. பூச்சிகளால் மகரந்தச்சேர்க்கை செய்யப்படாத தாவரங்கள் ஒருபோதும் தழைக்காது. பூக்களுக்கும் பூச்சிகளுக்கும் காலநிலை மாற்றம் ஏற்படுத்திய பெரும் துயரம் இது” என்று வருத்தமுடன் முடிக்கிறார் கோவை சதாசிவம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *