• June 26, 2025
  • NewsEditor
  • 0

ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த வாரம் கோயம்புத்தூரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதையடுத்து தான் ஊரில் இருந்து திரும்பி வரும் வரை தனது வீட்டினை கவனித்துக்கொள்ளும்படி அருகில் வசிப்பவரிடம் கூறி சென்றுள்ளார்.

உடைந்து கிடந்த பீரோ பெட்டி

இதையடுத்து வீட்டினை தினமும் கவனித்து வந்த எதிர் வீட்டுக்காரர், நேற்று காலை ரவிச்சந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

திருட்டு கும்பல் தூவி சென்ற மிளகாய் பொடி

உடனடியாக அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்ததுடன் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியானார்.

இது குறித்து கோயம்புத்தூர் சென்றிருந்த வீட்டின் உரிமையாளர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்த எதிர் வீட்டுக்காரர், கேணிக்கரை காவல் நிலையத்திலும் புகார் செய்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த கேணிக்கரை காவல் நிலைய போலீஸார், தடயவியல் நிபுணர்களை கொண்டு ஆய்வு நடத்தியதுடன் ‘மிளகாய் பொடி’ திருட்டு கும்பல் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடயவியல் போலீஸார் ஆய்வு

தான் நடித்த படம் ஒன்றில் திருட செல்லும் வடிவேலும் அவரது சகாக்களும் திருடிய வீட்டில் தடயங்களை மறைக்க மிளகாய் பொடியினை தூவி செல்வர். அதே போன்று ரவிச்சந்திரனின் வீட்டில் திருட வந்தவர்கள் தங்களின் தடயங்கள் தெரியாமலிருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றிருக்கும் சம்பவம் அப்பகுதியில் வசிப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *