
பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்கள், அவ்வப்போது ஹேக் செய்யப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனின் எக்ஸ் தளப் பக்கத்தை மர்மநபர்கள் முடக்கியுள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், “என்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தை சிலர் முடக்கியுள்ளனர். அதில் தற்போது வரும் தகவல்களை நான் பதிவிடவில்லை. என் கணக்கை மீண்டும் பெறும் வரை, அந்த பக்கங்களில் இருந்து வரும் பதிவுகளுக்குப் பதிலளிக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக அவர் கணக்கில் இருந்து கிரிப்டோகரன்ஸி தொடர்பான செய்திகள் வெளி யானதால் ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன், இந்தவிளக்கத்தைத் தெரிவித்துள்ளார். ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.