
கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் கொச்சியில் வைத்து காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்துவருகிறது.
சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அந்த சம்பவத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் உள்ளிட்ட பெண் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக 2018-ம் ஆண்டு மே மாதம் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
ஹேமா கமிட்டியில் நடிகை சாரதா, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலகுமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். ஹேமா கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கையை முதல்வர் பினராயி விஜயனிடம் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி சமர்ப்பித்தது.
ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும் அதில் உள்ள விபரங்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹேமா கமிட்டி அறிக்கையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டது.
ஹேமா கமிட்டி அறிக்க வெளியான பிறகு நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து மீடியக்களிடம் வெளிப்படையாக பேசினர். அதன் அடிப்படையில் மலையாள சினிமா இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதன் எதிரொலியாக மலையாள சினிமா கலைஞர்கள் சங்கமான அம்மா அமைப்பின் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். கொல்லம் தொகுதியில் சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது அரசியல் ரீதியாக பரபரப்பை கிளப்பியிருந்தது.

இதையடுத்து நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். பெண் போலீஸ் அதிகாரிகளிடம் நடிகைகள் வாக்குமூலம் அளிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. அதே சமயம் நடிகைகளிடம் வாக்குமூலம் அளிக்கும்படி வற்புறுத்தக்கூடாது என கோர்ட் கூறியிருந்தது.
இந்த நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட 34 வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டதாக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் அளிக்க முன்வராததால் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.