
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
என் தந்தைக்கு மகனான நான் எழுதுவது..
நான் ஒரு எழுத்தாளனாக இருந்து கொண்டு அம்மாவைப் பற்றி ஆயிரம் கவிதைகளை நான் எழுதி உள்ளேன் ஆனால் உனக்காக ஒரு கவிதையோ இல்லை ஒரு கடிதமோ இதுவரை எழுதி கொண்டதே இல்லை..
நான் எழுத்தாளர் என்று ஊர் ஊராக பெருமையாக சொல்கிறாய் ஆனால் ஒரு முறை கூட எனக்காக என்ன எழுதினாய்? என்றோ நீ என்ன எழுதுகிறாய்? என்றோ வாசித்து பார்த்ததே இல்லை.. இந்த கடிதமும் நீ வாசித்து பார்க்க மாட்டாய் என நம்புகிறேன்..
சிறுவயதில் என்னை பெற்றவள் உன்னை விட்டு சென்றபோது கூட உனது மனம் எப்படி வலித்திருக்கும் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உனது உடன்பிறப்புகள் உனக்கு செய்த துரோகத்தை அம்மா சொல்லி கேட்கும் பொழுது எப்படி இவரால் இவ்வளவு துயரங்களைத் தாங்கிக் கொண்டும் சிரிக்க முடிகிறது என பலமுறை சிந்தித்து இருக்கிறேன்.
27 வருடங்களில் உனது எல்லா முகத்தையும் பார்த்த நான் நீ துவண்டு தோல்வியோடு இருந்த முகத்தை மட்டும் நான் பார்த்ததே இல்லை… ஒருவேளை அந்த முகத்தை காட்டினால் நான் துவண்டு போவேனோ என நினைத்தாயோ என்னவோ?.
இரண்டாவது அம்மாவை திருமணம் செய்து கொண்டு நீ உன் வாழ்வில் எவ்வளவு பெரிய தியாகத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார் என்பதை எனக்கு நன்கு அறிந்ததே.
பலமுறை நான் சிந்தித்து இருக்கிறேன் இவ்வளவு கடினமான சூழ்நிலை நீங்கள் எப்படி கையாண்டு இருப்பீர்கள் என்று. ஒருமுறை கூட என்னை பார்த்து நான் சிறிய வயதில் அவ்வளவு கஷ்டப்பட்டேன் இதை செய்யாதே! என்று அறிவுரை சொல்லியதே இல்லை ஏன் ?
உன்னுடைய கஷ்டத்தை என்னிடம் சொல்லி புலம்பிய நாட்களிலும் என் நினைவில் கூட இல்லை…
இன்று வரை எனக்கு நினைவில் இருப்பது அம்மா சொன்ன அவர்களின் கஷ்டங்கள் தானே தவிர உன் வாழ்வில் எவ்வளவு கஷ்டத்தை நீ அனுபவித்துள்ளார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு என்னிடம் பகிர்ந்தது இல்லை.
எனக்கு தெரியக்கூடாது என்பதால் இதை சொல்லவில்லையா? இல்லை தெரிந்து கூட அதனால் நீ காயப்பட்டு விடக்கூடாது என்பதால் பகிர்ந்து கொள்ளவில்லையா? என்று உன்னிடம் கேட்க வேண்டும் என்றெல்லாம் நினைத்தேன்..
சிறிய வயதிலேயே என்னை வேலைக்கு அனுப்பும் பொழுது நம் குடும்பம் வறுமையில் உள்ளது என்பதை மட்டும் எனக்கு புரிய வைக்கவே இல்லை பணத்தின் அருமையை இப்போதே புரிந்து கொள் என்று தான் என்னை அறிவுறுத்தினாய்.
இன்று கையில் பணம் சம்பாதிக்கும் போது தான் தெரிகிறது நீ இவ்வளவு பெரிய தியாகத்தை செய்து கொண்டு இருக்கிறாய் என்று.
என்னுடைய எல்லா முடிவுகளையும் உன்னிடம் சொல்லிய பிறகு முடிவெடுக்கும் என்பது நீ வளர்த்த பக்குவமா என்னவோ. நீ ஒரு முறை கூட என் முகத்தை பார்த்து பெருமையாக பேசியதே இல்லை ஆனால் என்னை நினைத்து பல இடம் பெருமையாக பேசியதை நான் நன்றாகவே அறிந்தேன்..
நம் வீட்டு வாசலில் எழுத்தாளர் என நீ வைத்த பெயர் பலகையை நீ இவ்வளவு பெருமையாக என்னை நினைக்கிறாய் என்பது வெளிக்காட்டுகிறது..
நான் அம்மாவிடம் தொலைபேசியில் பேசியதை விட மிகக் குறைவான நேரத்தை தான் உன்னிடம் பேசி இருக்கிறேன்.
என்னுடைய முதல் மாத சம்பளத்தில் அம்மாவிற்கு வாங்கி கொடுத்த சேலை மட்டும் நினைவிருக்கிறது. இதுவரை உனக்கு பெரிதாக என்ன வாங்கி கொடுத்து விட்டேன்? நீயும் என்னிடம் என்ன கேட்டுவிட்டாய்? நானும் உன்னிடம் கேட்கும் அளவிற்கு நீ வைத்ததே இல்லை. எனக்கு தேவையானது அதற்கேற்ற வயதிலேயே எனக்கு வாங்கிக் கொடுத்த நீ உனக்கு என்ன தேவை என்பதை நான் அங்கு அறிவேன்…
எந்த காதல் வலையிலும் சிக்காமல் என் வாழ்வையும் உன் கையினாலே தீர்மானிக்கும் பொறுப்பை தான் கேட்டாய் அதை உன் கையிலே கொடுத்து விட்டேன். எனது வாழ்வு முழுக்க உனது அறிவுரை இன்றி ஆறுதலோடு தீர்மானிக்கும் பொறுப்பு நீயே வைத்துக்கொள். நீண்ட நாள் ஆசை எனக்கு ஒருநாள் முழுக்க நீயும் நானும் மட்டும் நிறைய பேசியே பொழுதுகள் கழிக்க வேண்டும்..
ஒருவேளை இந்த கடிதம் உனக்கு படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் படித்து முடித்துவிட்டு கூட மௌனமாகவே இருந்து விடு நீயாக இருந்தாலே போதும் நான் மகனாகவே இருந்து விடுகிறேன்..
என்றும் உன் மகனாகவே..
ரசூல் முகைதீன் அப்பாஸ்
திட்டுவிளை,கன்னியாகுமரி மாவட்டம்
