
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்வர் ஸ்டாலின் அவர் நெருக்கடி காலகட்டத்தில் பட்ட கஷ்டங்களை மறந்து விட்டார் போல. திமுக அரசாங்கத்தை எதிர்த்து யார் சமூக வலைதளங்களில் பதிவிட்டாலும் கைது செய்யப்படுகிறார்கள்.
இது தனி நபர் உரிமையை மீறும் செயல். அவர்கள் நெருக்கடி காலத்தில் அனுபவித்த துன்பங்களை எல்லாம், தற்போது மக்களை அனுபவிக்க வைக்கிறார்கள். சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது.
தமிழக மக்களின் மீது தாங்க முடியாத வரி சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் இந்த அரசாங்கத்தால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நெருக்கடி காலத்தின் ஒரு பகுதியில் தமிழகம் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. திமுக ஆரம்பத்தில் இருந்தே கல்வியில் அரசியல் செய்கிறது.

நாங்கள் ஒருபோதும் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை மிகவும் முக்கியமானது. தமிழ்நாடு அரசு இதில் முரணான கருத்துகளை கூறுகிறார்கள். மாநில அரசின் தோல்விக்கு மத்திய அரசின் மீது பழி போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, சித்தாந்தம் இருக்கிறது. அந்தந்த கட்சிகள் அவரவர் சித்தாந்தத்தில் தெளிவாக இருக்கிறார்கள். அதிமுக – பாஜக கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. இதை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. தமிழகத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

திமுக மீது விடுதலை சிறுத்தைகள் எத்தனை முரண்பாடுகளை வைத்திருக்கிறார்கள். அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. அதுவே அதிமுக – பாஜக என்றால் உடனே விரிசல் என்பார்கள். 2026 தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். திமுக வீட்டுக்கு போவது உறுதி.” என்றார்.