
ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த இருவர் மோதுவது பரபரப்பாகியுள்ளது.
தமிழ்த் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கான சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கத்துக்கான தேர்தல் நடந்து வருகிறது. கடந்த முறை நடந்த தேர்தலில் போஸ் வெங்கட், சிவன் சீனிவாசன் அணி வெல்ல, போஸ் செயலாளராகவும் சிவன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
இவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தல் நடத்துவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருகின்றன.
முன்னதாக போஸ் வெங்கட் நிர்வாகம் முன்னாள் தலைவரான ரவி வர்மா மற்றும் சிலரை தேர்தலில் நிற்க முடியாதபடி தடை விதித்ததாகக் கூறப்படுகிறது.
ரவி வர்மா மீது சில புகார்கள் எழுந்ததாகவும் அதன்பொருட்டே இந்த நடவடிக்கை எனவும் சொல்கின்றனர் போஸ் தரப்பினர்.
ஆனால் இந்த நடவடிக்கையை எதிர்க்கும் ரவி வர்மா ஆதரவாளர்களோ, ‘முற்றிலும் சங்க விதிமுறைகளுக்குப் புறம்பான நடவடிக்கை இது’ என்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன் நடந்த பொதுக்குழுவிலும் ரவி வரமாவின் ஆதரவாளரகப் பார்க்கப்படும் தினேஷ் கோபால்சாமி இது தொடர்பாகப் பேச முற்பட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு கூட்டம் உடனடியாக முடித்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், தற்போது போஸ் வெங்கட், சிவன் சீனிவாசன் அணி மீண்டும் போட்டியிடப் போவதாகத் தெரிகிறது. அணியில் தற்போது இருப்பவர்களில் ஒரு சிலர் மாறலாம் என தெரிகிறது.
ரவி வர்மா போட்டியிட முடியாதபட்சத்தில் அவரது ஆதரவுடன் தினேஷைத் தலைவராக கொண்டு ஒரு அணி களமிறங்க உள்ளதாம். இந்த அணியில் சங்கத்தின் முன்னாள் செயலாளர் எம்.டி.மோகன் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவார் என்கிறார்கள்.
இந்த இரு அணிகள் தவிர மூன்றாவதாக ஒரு அணியும் போட்டியிட உள்ளது என்பதுதான் ஹைலைட். கடந்த தேர்தலில் போஸ் வெங்கட் அணியில் போட்டியிட்டு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பரத் தலைமையில் களமிறங்குகிறது இந்த மூன்றாவது அணி.

இந்த அணியில் செயலாளர் பதவிக்கு நவீந்தர் போட்டியிடுவதாகச் சொல்கிறார்கள். தொடர்ச்சியாக கடந்த சில தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார் நவீந்தர். கடந்த தேர்தலில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இதில் ஹைலைட் என்னவெனில் போஸ் வெங்கட், நவீந்தர் இருவருமே திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். போஸ் வெங்கட்டுக்கு திமுக தலைமை வரை செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலிலேயே சீட் கேட்டவர் இவர். நவீந்தரோ அமைச்சர் அன்பில் மகேஷுடன் தொடர்பில் இருப்பவர்.
ஒரே பதவிக்கு திமுகவைச் சேர்ந்த இருவரும் குறிவைப்பதால் சங்க உறுப்பினர்களிடையே ஒருவித குழப்பம் நிலவுவதாகச் சொல்கிறார்கள்.
இருவருமே போட்டி போடுவது உறுதியாகுமா அல்லது இவர்களில் யாராவது பொறுப்பு மாறுவார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.