
மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் காவல் துறையினர் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்தல் உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்பட 52 நிபந்தனைகளை மாநகர காவல் துறை விதித்தது. இதில், மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் அந்தந்த உட்கோட்ட காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி பாஸ் வாங்க வேண்டும்; மாநாட்டு திடலில் ட்ரோன்கள் பறக்கக்கூடாது; மாநாடு நடக்கும் இடத்துக்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும்; முருகனின் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அறநிலையத் துறை அதிகாரிகளிடம் அனுமதி உள்ளிட்ட 6 நிபந்தனைகளுக்கு இந்து முன்னணி அமைப்பு ஆட்சேபம் தெரிவித்து நீதிமன்றத்தை அணுகியது. வாகன பாஸ் தவிர்த்து, பிற 5 நிபந்தனைகள் மாற்றியமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.