
உத்தரப் பிரதேசத்தில் முஸ்கான் என்ற பெண் தனது கணவனைக் காதலன் துணையோடு கொலை செய்து உடலை ஊதா கலர் டிரம்மில் சிமெண்ட் போட்டு வைத்தார்.
சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி தேனிலவுக்குச் சென்றபோது தனது காதலன் மூலம் அடியாட்களை வைத்து கொலை செய்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜ் நகரைச் சேர்ந்த சிதாரா என்ற பெண்ணை, கேப்டன் நிஷாத் திருமணம் செய்தார்.
இது பெற்றோர் பார்த்துப் பேசி முடித்து வைத்த திருமணமாகும். திருமணம் முடிந்தவுடன் நிஷாத் அன்று இரவு முதலிரவு அறைக்குள் சென்றார். அங்கு சிதாரா படுக்கையில் மிகவும் அமைதியாகக் கையில் கத்தியுடன் அமர்ந்திருந்தார்.
கையில் கத்தி இருப்பதைப் பார்த்த நிஷாத் அதிர்ச்சியடைந்தார். நிஷாத் படுக்கையில் அமர சென்றபோது, ‘என்னைத் தொடாதே. அப்படித் தொட்டால் 35 துண்டுகளாக வெட்டி விடுவேன். நான் அமன் சொத்து’ என்று சிதாரா தெரிவித்தார்.
இதைக் கேட்டவுடன் நிஷாத் அப்படியே உரைந்துவிட்டார். இரவு முழுவதும் இரண்டு பேருமே தூங்கவில்லை. நிஷாத் அருகில் இருந்த ஷோபாவில் அமர்ந்து இருந்தார். சிதாரா படுக்கையில் கத்தியுடன் அமர்ந்திருந்தார். எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சம் நிலவி வந்தது.
இது குறித்து நிஷாத் கூறுகையில், ”முதல் நாளில் கத்தியுடன் சிதாராவைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகிவிட்டேன். அவர் என்னை 35 துண்டுகளாக வெட்டுவேன் என்று மிரட்டினார். இதனால் அன்று இரவு முழுவதும் ஷோபாவில் அமர்ந்திருந்தேன். அடுத்த மூன்று நாள் இரவும் அப்படியே சென்றது.
சிதாரா நள்ளிரவுக்குப் பிறகு தூங்குவார். நான் இரவு முழுவதும் பயத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் அமர்ந்திருந்தேன். ஏற்கனவே மனைவிகள் கணவனைக் கொலை செய்த செய்திகளைச் செய்தித்தாள்களில் படித்திருந்தேன். எனவே நானும் அதில் ஒருவனாக மாறிவிடக்கூடாது என்பதற்காக உறங்காமல் இருந்தேன்” என்றார்.
மூன்று நாள் கழித்து இது குறித்து நிஷாத் தனது தாயாருடன் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். உடனே நிஷாத் தாயார் இது குறித்து சிதாராவுடன் பேசியபோது, “நான் அமன் காதலிக்கிறேன். கட்டாயப்படுத்தியதால்தான் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டேன். அமனுடன் வாழ விரும்புகிறேன். அமனுக்குத்தான் என்னுடன் முதலிரவு கொண்டாட உரிமை இருக்கிறது” என்று சிதாரா தெரிவித்துவிட்டார்.
இதனால் சிதாராவின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து தங்களது மகளிடம் பேசிப் பார்த்தனர். உறவினர்கள் மற்றும் பெரியவர்களும் வந்திருந்தனர். அவர்கள் அமனை மறந்துவிட்டு நிஷாத்துடன் வாழும்படி சிதாராவிற்கு அறிவுரை வழங்கினர்.
சமரச பேச்சுவார்த்தையில் நிஷாத்துடன் வாழ்வதாக சிதாரா தெரிவித்தார். இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக இரு தரப்பினரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
சொன்னபடி சிதாரா தனது கணவன் வீட்டிற்குச் சென்றார். சம்மதித்து வந்தாலும் சிதாரா தனிப்பட்ட முறையில் நிஷாத்தைத் துன்புறுத்த ஆரம்பித்தார். அதோடு திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி தன்னை அமனுடன் அனுப்பி வைக்கும்படி தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார்.

திடீரென நள்ளிரவு வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறிக் குதித்து சிதாரா தப்பிச்சென்றுவிட்டார். அவர் நேராக அமனிடம் சென்றுவிட்டார்.
இது குறித்து சிதாராவின் தந்தை லட்சுமி நாராயண் கூறுகையில், ”எனது மகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு நல்ல மணமகனைத் தேடினேன். அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தோம். எங்களை அவமானப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்” என்றார்.
இப்பிரச்னை போலீஸ் நிலையத்திற்குச் சென்றது. இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது குறித்து நிஷாத் கூறுகையில், “அவள் திரும்பி வந்தால், நான் அவளுடன் மீண்டும் வாழ முடியாது என்று நினைக்கிறேன். அந்த பயம் இன்னும் நீங்கவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.