
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வன்னி மரத்தடி விநாயகர் கோயில் அருகில் தரிசிக்க வரும் பக்தர்களை பூனை ஒன்று கடிப்பதால், வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் நிலைக்கு ஆளாகின்றனர். எனவே, கோயில் வளாகத்தில் கடிக்கும் பூனைகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் உள்ளூர் வெளியூர் பக்தர்கள், வெளி மாநிலங்கள், வெளிநாட்டு பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்ய வருகின்றனர். இக்கோயிலில் வன்னி மரத்தடி விநாயகர் கோயில் அருகே தரிசனம் செய்ய வரும் பக்தர்களை சில வாரங்களாக பூனை ஒன்று கடிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதில் விழிப்புணர்வுள்ள பக்தர்கள் வெறி நோய் தடுப்பூசி செலுத்துகின்றனர். மேலும், விழிப்புணர்வு இல்லாத பக்தர்கள் வளர்ப்பு பூனைதானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.