
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 25) பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் பாமக இணைபொதுச் செயலாளராக எம்எல்ஏ அருளுக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராமதாஸ், “ எம்.எல்.ஏ அருள் எப்போதும் என்னுடன்தான் இருப்பார். இமயமலை உயரத்திற்கு பொறுப்புக் கொடுக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “கூட்டணி குறித்து இப்போது சொல்லக்கூடாது. நாங்கள் அமைக்கப்போகும் கூட்டணி நல்ல கூட்டணி. வித்தியாசமான கூட்டணி. வெற்றி பெறக்கூடிய கூட்டணி.

இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கக் கூடிய மாநில தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்க போகிறார்கள். இவர்களைத்தான் நான் தேர்ந்தேடுப்பேன். இவர்கள்தான் வருங்கால சட்டமன்ற உறுப்பினர்கள். கட்சியினுடைய தலைவராகப் பொறுப்பேற்று நல்லவர்களை சட்டமன்ற உறுப்பினர் ஆக்குவேன்” என்று பேசியிருக்கிறார்.