
சினிமாவுக்குத்தான் போகணும், பாட்டு எழுதணும் என ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே முடிவு பண்ணி, 2000 வாக்குல சேலத்துல இருந்து சென்னைக்கு வந்தவர்.
ஆயிரம் ஆசைகளை நெஞ்சில் சுமந்து, முதலில் சென்னை வந்தபோது, அவர் நினைத்தது நிறைவேறவில்லை. ஏமாற்றத்தில் சொந்த ஊருக்கே திரும்பும் நிலை.
வாழ்க்கையில் செல்லக்கூடாத பாதைகளுக்கெல்லாம் சென்று அடிபட்டுத் திரும்பியவர், இன்று தனது பாடல்வரிகள், எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களை, ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
2005-ம் ஆண்டு சிம்புவின் ‘தொட்டி ஜெயா’ படத்தில் ஆரம்பித்த இவரது சினிமா பாடல்கள் எழுதும் பயணமானது, நெடுஞ்சாலை ‘தாமிரபரணியில் நீந்தி வந்த’, கல்யாணம் எனும் நிக்ஹா ‘என் தாரா, என் தாரா! நீயே என் தாரா’, வாகை சூடவா ‘போறானே’, 96 பாடகள், நெற்றிக்கண் ‘இதுவும் கடந்துபோகும்’, மெய்யழகன், இப்போது மணிரத்னத்தின் தக் லைஃப் ‘அஞ்சு வண்ணப் பூவே’ என இருபது ஆண்டுகளில் நூறாவது படம், நூற்றுச் சொச்சம் பாடல்கள் எனக் கவனிக்கத்தக்க முக்கியமான தமிழ் கவிஞர்கள், பாடலாசிரியர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார்.
தமிழ் மொழியில் இருக்கக்கூடிய குறிப்புப் பொருள், படிமம், குறியீடுகளையெல்லாம் சினிமா பாடல்களில் ரீங்காரமிடச் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இன்னும் பல ஆயிரம் மைல்கள் அனுபவம் சேகரித்துப் பயணிக்கக் காத்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த 20 ஆண்டுகள் பயணம் மற்றும் தனது நூறாவது திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கார்த்திக் நேத்தா, “பாட்டு எழுத சென்னைக்கு வந்து பாதைகள் பல மாறிய கவிஞன் எனக்கு, வெளிவர இருக்கிற ‘GOOD DAY’ திரைப்படம் நூறாவது படம்.
2005 இல் தொடங்கிய பயணம். இருபது ஆண்டுகளில் நூறு படங்கள் என்பதும் நூற்றுச் சொச்சம் பாடல்கள் என்பதும் பெரும் சாதனை ஒன்றுமில்லை.
ஆனால் இந்தப் பயணத்தில் காலமும் வாழ்க்கையும் கற்றுத் தந்திருப்பவை ஏராளம். ஒரு PESSIMIST ஐ OPTIMIST ஆக மாற்றிய மனிதர்களின் அன்பிற்கும் வாழ்க்கையின் அருளுக்கும் என்றும் நன்றி.

வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடிய பாடகர்கள், பத்திகள் பல எழுதிப் பரவலாகக் கொண்டு சேர்ந்த பத்திரிகையாளர்கள், பாடல்களில் கவிதை செய்ய விழையும் என் போன்றோர்க்குப் பெரும் ஊக்கமளித்து வரவேற்கும் மக்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
பெரிதினும் பெரிது செய்ய விழைவேன். இந்நேரத்தில் கண்ணதாசனையும் அறிவுமதி அண்ணனையும் என்னன்பு நா. முத்துக்குமாரையும் தழுவிப் பணிகிறேன்.
குடும்பத்தார்க்கு எனது நன்றி.
“என்றன் பாட்டுத் திறத்தாலே
இவ்வையத்தை யான்
பாலித்திடல் வேண்டும்” என்ற
பாரதியைப் போல நானும் பாடல் வழி, எழுத்தின் வழி பெரும்பிழம்பாய்ப் பிறப்பெடுக்கவே விரும்புகிறேன்.
வழிப்போக்கர்களின் நினைவில் ஒரு கதையாக, வாழ விரும்புவோரின் அகத்தில் ஓர் ஊக்கப்பாடலாக நின்று நிலைபெற அருள்வாய் தமிழ்ப் பேரணங்கே!” என்று நெகிழ்ந்திருக்கிறார் கார்த்திக் நேத்தா.
வாழ்த்துகள் கார்த்திக் நேத்தா
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…