• June 25, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இமாச்சலப்பிரதேசப் பதிவு எண் கொண்ட வாடகை பைக்குகள் லடாக் பகுதியில் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு எங்கள் பயண ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு ஒன்றைச் செய்திருந்தனர். ஸ்ரீநகரிலிருந்து மணாலி செல்லும் அணி கொண்டு வரும் பைக்குகளை எங்கள் அணியினரிடம் கொடுத்துவிட்டு, நாங்கள் பயன்படுத்திய வண்டிகளைக் கொண்டு அவர்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.

அதன்படி, இரு அணியினரும் குறித்த நாளில் சார்சுவை அடையும் வகையில் திட்டமிட்டிருந்தனர். இந்த வாகன மாற்று ஏற்பாடு இருக்கும் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீநகர் அணியினர் வைத்திருந்ததும் இமாலயன் ரக பைக்குகள்தான்.

அன்றைய தினம் நாங்கள் புறப்படுவதற்கு முன்பு சஷாங்க் சில நிமிடங்கள் பேசினார். இன்று மாலைக்குள் லே நகரைச் சென்றடைவதுதான் பயணத் திட்டம். கொண்டை ஊசி மலைப் பகுதிகள், சமதளம், வாட்டர் கிராஸிங் என இன்றைக்கு அனைத்துமே இருக்கும். சவாலானதாகவும், சுவாரசியம் நிறைந்ததாகவும் இருக்கப்போகிறது. கிளம்பலாம் என்றார்.

நாக்கீலா, லாச்சுங் லா என்று இரண்டு கணவாய் பகுதிகளில் சிறிது நேரம் நிறுத்தி புகைப்படங்கள் எடுத்தோம். லாச்சுங் லா வை அடைந்தபோது, பதினாறாயிரம் அடி உயரத்தை எட்டியிருந்தோம். அதன் பிறகு (Gata Loops) காட்டா லூப்ஸ் மலைப் பகுதிகளை அடைந்தோம்.

ஜிக்- ஜாக் வடிவிலான 21 கொண்டை ஊசி வளைவுகள், அதில் வாகனத்தை இயக்குவதற்கென்று ஒரு லாகவம் இருக்கிறது. குறுகிய வளைவில் திரும்பும் போது, எதிரில் மொத்தச் சாலையையும் ஆக்கிரமித்துக் கொண்டு சரக்கு லாரிகள் வரும். கொஞ்சம் பிசகினாலும், வண்டி சறுக்கிவிடும் வாய்ப்புகள் அதிகம்.

பத்தொன்பதாம் வளைவில் திரும்பும் போது, எண்ணிலடங்கா பிளாஸ்டிக் பாட்டில்கள் கொட்டிக் கிடந்ததைக் காண முடிந்தது. அவை உபயோகப்படுத்தாத தண்ணீர் பாட்டில்கள். அங்கே இருக்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த மலையில் ஒரு சரக்கு லாரி கவிழ்ந்து, ஓட்டுநர் உயிரிழந்துவிட்டார்.

அந்த நபர்தான் உடலற்ற வடிவில் அப்பகுதியைக் கடப்பவர்களை வழி மறித்து தண்ணீர் கேட்பதாகவும், எல்லைச் சாமியாக நினைத்து அவருக்குத் தண்ணீர் பாட்டில் படைத்துவிட்டுச் சென்றால், பயணம் பாதுகாப்பானதாக அமையும் என்றும் அங்கிருந்த மக்கள் சொன்னார்கள்.

நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காகப் பல்லாயிரக்கணக்கான பாட்டில் நெகிழிக் குப்பைகளை அங்கே கொட்டி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறோம் என்பதனை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

அன்றைக்கு நாங்கள் மதிய உணவிற்கு பாங் என்ற இடத்தில் நிறுத்தியிருந்தோம். கிட்டத்தட்ட அனைவரும் சாப்பிட்டுக் கிளம்பும் சமயத்தில், அங்கே உடல் நிலை சரியின்றி ஒருவர் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

அவருடன் வந்திருந்த சக பயணிகள் கடையில் குளுக்கோஸ் / சத்து பானம் ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதைக் கவனித்த சஷாங்க், அவர்களிடம் சென்று பேசி, தன்னிடமிருந்த மருந்துகளைக் கொடுத்து உதவினார். உடனடியாக மருத்துவமனை அல்லது செயற்கை சுவாச உதவி அளிக்கும் மையத்திற்குச் செல்லச் சொன்னார்.

நண்பர்களுடன் அவரை அனுப்பிவைத்து விட்டு சஷாங்க் வந்ததை நாங்கள் சற்றே பீதியுடன்தான் பார்த்துக் கொண்டிருந்தோம்.

‘மாத்திரையைக் கொடுத்திருக்கிறேன். ஆனால் உடல் நிலை மோசமாக உள்ளது, அவர்கள் விரைந்து மருத்துவ உதவியை நாடுவது நல்லது நீங்கள் அனைவரும் தாயாரா, கிளம்பலாமா’ எனக் கேட்டுக்கொண்டே எங்களை நோக்கி வந்தார் சஷாங்க்.

அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது, AMH இத்தனை மோசமானதா என்று பூஜா கேட்க, விளக்கத் ​தொடங்கினார் சஷாங்க்.

“நம்மை சுற்றி உள்ள காற்றின் அழுத்தத்தின் அளவை அட்மோஸ்பரிக் பிரஷர் என்போம். உயரம் அதிகம் ஆக ஆகக் காற்றின் அழுத்தம் குறைந்து கொண்டே போகும். காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைந்துபோகும். இதனால்தான் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகின்றது.

8000 அடி உயரத்திற்கு மேல் சென்றுவிட்டால், நாளொன்றுக்கு ஆயிரம் அடிக்கு மேல் உயரம் ஏறக்கூடாது. நிதானமாக அடுத்தடுத்த நாள்களில்தான் ஏறவேண்டும்.. ஆனால் நம் பயணத் திட்டம் அதற்கு இடம் கொடுப்பதில்லை.

இந்த AMS மலை நோய் தீவிரமடையும் போது, அது HACE & HAPE என்று இரு வகை நோய்களுக்கு வழிவகைக்கும். HAPE நுரையீரலைப் பாதிக்கக்கூடியது. HACE- மூளையின் ஒரு பகுதியை வீங்கச் செய்யும்.

நோயின் தாக்கம் தெரிந்த நொடியே அருகில் இருக்கும் தாழ்வான, சமதள இடத்திற்கு வந்துவிட வேண்டும். காலம் தாழ்த்தினால் அடுத்த சில மணி நேரங்களில் மூளையின் செயல்பாடு தடைப்பட்டு மரணம் நேரிடும் வாய்ப்புள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிந்திக்கும் தன்மையில் மாற்றம் ஏற்படும். குழப்பமான மனநிலை, நடையில் தடுமாற்றம், சிலசமயம் எழுந்து நடக்கவே முடியாத நிலை ஏற்படும். பலரும் இதைச் சாதாரணச் சுவாசக் கோளாறென எண்ணிவிடுவர்.

அதனை உறுதிசெய்துகொள்ளத் தரையில் ஒரு நேர்கோட்டை வரைந்துவிட்டு, சுவாசப் பிரச்சினை இருக்கும் நபரை அதன் மீது அடிமேல் அடி வைத்து நேராக நடக்கச் சொல்லவேண்டும். அவர் அப்படி நடக்கச் சிரமப்பட்டால், தடுமாற்றம் இருந்தால், இது HACE ஆக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஒரு சமயம் மகுலிஸ்தான் அரசர், சுல்தான் சையத் கான் என்பவர் கூட லடாக் பகுதியைப் படையெடுத்து வரும் போது இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இப்படிப் பல நூற்றாண்டுகளில் பல நூறாயிரம் காவுகளை வாங்கியிருக்கின்றன இந்த வகை நோய்கள்.

HACE & HAPE இரண்டும் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே தாக்கும். பாதிக்கப்படுபவர்களை நேரம் காலம் பார்க்காமல் உடனடியாக அந்த இடத்தில் இருந்து கீழே அழைத்துச் சென்றுவிடவேண்டும். அது நடு இரவானாலும் சரி.’

அவர் பேசியதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தபோது வந்த பயத்தை விட, சஷாங்க் பேசியதுதான் எங்களுக்கு அச்சுறுதலாக இருந்தது. மாறியிருந்த எங்களது முக பாவனைகளைக் கண்டுகொண்டவராக,

‘சரி, சரி. இங்கிருந்து சில கிலோமீட்டர்களில் (moore plains) மோரி சமவெளிப் பகுதிகள் வந்துவிடும். கிட்டத்தட்ட, நாற்பது கிலோமீட்டர்களுக்கு நேரான சாலை. அதுவும் தார் சாலை. பல நாட்டு பைக் பிரியர்களுக்குக் கனவு இடம் இது.’

‘நேரான சாலை என்பதனால் வேகமாகச் செல்லலாம்தான். ஆனால் அதிவேகம் கூடாது. எதிரில் வாகனங்கள் வந்துகொண்டே இருக்கும்.’

‘எச்சரிக்கையாக இருங்கள், மதிய உணவுக்குப் பிறகு இந்தச் சாலையில் செல்லவிருக்கிறோம். வளைவுகள், குழி மேடுகள் எதுவுமே வராது. உண்ட மயக்கத்தில் தூங்கிவிடாதீர்கள். பின்னிருக்கையில் இருப்பவர்கள், வண்டி ஓட்டுபவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வாருங்கள்’ எனச் சொன்னார்.

‘அப்போ தனியே வந்திருப்பவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லையா’ என ஆயுஷ் கேட்க,

‘நீ வேண்டுமானால் பாடிக்கொண்டே வா’ எனப் பதிலளித்தார் சஷாங்க்.

மோரி சமதளப் பயணத்தை பற்றிய பேச்சு AMS கவலைகளைக் கொஞ்சம் மறக்கச் செய்திருந்தது.

‘நாம் திட்டமிட்டிருந்ததை விட, இங்கே அதிக நேரம் எடுத்துக்கொண்டுவிட்டோம். விரைந்து கிளம்பலாம்’ என்றவாறே, அவரது பைக்கின் எஞ்சினை இயக்கத் தொடங்கினார்.

அணியினர் அனைவரும் எளிதில் அடையாளம் காண வேண்டும் என்பதற்காக சஷாங்க், பளிர் ஆரஞ்சு வண்ண மேல்சட்டையைத்தான் எப்போதும் அணிந்திருப்பார். இதனால், எங்கள் அணியினரின் பைக் வரிசையில், மற்ற பைக்குகள் வந்து கலந்துவிட்டாலும், எங்களால் சஷாங்க் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுகொள்ள முடிந்தது.

நான் அன்றைக்கு வழிநெடுகிலும் காணொளிகளைப் பதிவு செய்துகொண்டே வந்தேன். எதிரே செல்லும் பைக்கர்கள் எங்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைப்பதும், நாங்கள் பதிலுக்குக் கையசைத்து உற்சாகத்தை வெளிப்படுத்துவதுமாக முதல் ஐந்து – பத்து கிலோமீட்டர்கள் சென்றிருப்போம்.

எதிர்புறம் வாகனங்கள் வருவது குறைந்ததும், பைக்கின் த்ரோட்டிலை முறுக்கி, இமாலயன் ரக பைக்குகள் செல்லக்கூடிய உச்ச வேகத்தை அடைந்திருந்தோம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருந்ததால், அந்தப்பகுதியில் எதிர்காற்றும் அதிகம் வீசியது.

நவீன், பைக்கின் அதிகபட்ச வேகத்தை எட்டியிருந்தபோது, என் மீது மோதிய காற்றின் விசைக்கு ஈடுகொடுப்பதற்காக, பைக்கையும், நவீனையும் இறுகப் பற்றிக்கொண்டேன். பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு சமநிலை காப்பது ஒரு கலை. ஓட்டுபவரின் முதுகில் சாய்ந்து முழு கனத்தையும் அவர் மீது போடக்கூடாது.

அதே சமயம், பின்னால் சாய்ந்தால், காற்றின் விசையால் தூக்கிவீசப்படும் அபாயமும் இருக்கிறது. இரண்டுக்கும் மத்தியில் சரியாக சமநிலை காத்து பைக்கைக் கைகளால் பிடித்துக்கொண்டால்தான் உயிரைப் பிடித்துவைத்திருக்க முடியும்.

அடுத்த பத்து- பதினைந்து நிமிடங்களுக்கு வேகம் குறையவேயில்லை. அணிந்திருந்த தலைக் கவசத்தைத் தாண்டி, காதுக்குள் காற்று பலமாக அடித்தது. தலைக்கும், தலைக் கவசத்திற்கும் இருந்த சிறு இடுக்கு, இடைவெளிகளையும் கண்டுபிடித்து காற்று உள்நுழைந்து காதுக்குள் ‘ஊரர்ர்ர்’ ஓசையை எழுப்பியது. வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கன்னங்கள் அதிர்ந்து, கண்களில் நீர் துளித்தது. என்னையும் காப்பாற்றிக்கொண்டு, அந்நேரத்தின் அனுபவத்தையும் தவறவிடாமல் பார்த்துக்கொண்டேன்.

இருபுறமும் உயர்ந்த, பழுப்பு நிற மலைத் தொடர்கள். நடுவில் நீண்ட தார் சாலை. இதைத் தவிர அங்கு வேறு எதுவும் தென்படவில்லை. முடிவற்றதாக நீண்டுகொண்டிருந்தது அப்பயணம். இது இந்தப் பூமியின் ஒரு பகுதிதானா என்றுகூடத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

சிறிது நேரத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்தவர்கள், வேகத்தைக் குறைப்பதற்கான சைகையைச் செய்தனர். வேகத்தை படிப்படியாகக் குறைத்து, ஓரிடத்தில் அனைவரும் பைக்குகளை நிறுத்தினோம்.

எங்களைத் தவிர யாருமே அப்போது அங்கு இருக்கவில்லை. இருபுறமும் முடிவற்ற சாலைகள். அங்கே சிறிது நேரம் புகைப்படங்கள் எடுப்பதற்கும், அவ்விடத்தின் அழகை ரசிப்பதற்கும் நின்றிருந்தோம். இருபது நிமிடங்களுக்குப் பிறகு, லே நகரை நோக்கிய எங்களது பயணம் மீண்டும் தொடங்கியது.

இரண்டு தினங்களுக்குப் பிறகு, மீண்டும் நகர வாசம். சொகுசு விடுதியில் தங்கப் போகிறோம் என்று நாங்கள் நினைத்திருந்தபோது, பயணத் திட்டத்தில் கூடுதல் இடமாக திக்சே புத்த மடாலயத்திற்குச் செல்லப் போகிறோம் என்றார் சஷாங்க். லே நகருக்குக் கிழக்கே இருபது கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்தது அந்தப் புத்த மடாலயம்.

அப்போது மாலை நான்கு மணி இருக்கும். அன்றைக்கு மட்டும் இருநூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்திருந்தோம். அதோடு, மூன்றாம் நாள் பயணம் என்பதால், இலேசாகக் கழுத்து வலி தொடங்கியிருந்தது. அணியினரும் கொஞ்சம் சோர்வடைந்திருந்தனர்.

நுழைவுச்சீட்டைப் பெறும் இடத்தில் நின்று பார்க்கும்போதுதான், மடாலயம் குன்றின் உச்சியில் இருந்ததும், படிகளின் வழியேதான் மேலே செல்ல முடியும் என்பதையும் அறிந்துகொண்டோம்.

இன்றைக்கு இங்கே போய்த்தான் ஆகவேண்டுமா என்று மனீஷ் புலம்பிக் கொண்டே வர, நாங்கள் அனைவரும் படியேறத் தொடங்கினோம்.

உள்ளே நுழைந்ததும் எங்களுக்கிருந்த சோர்வனைத்தையும் போக்கும் ஒரு காட்சியைக் கண்டோம்.

(தொடரும் )

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *