• June 25, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிரா மாநிலம், பாராமதி முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரின் சொந்த ஊர் ஆகும். கடந்த பல சகாப்தமாக சரத் பவார்தான் தனது சொந்த ஊரில் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஆனால் 2023ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்ட பிறகு சரத் பவாரும், அவரது சகோதரர் மகன் அஜித் பவாரும் பிரிந்து விட்டனர். கட்சியை அஜித் பவாரிடம் பறிகொடுத்துவிட்ட சரத் பவார் தனது சொந்த ஊரையாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று போராடி வருகிறார். பாராமதியில் உள்ள மாலேகாவ் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக கமிட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் அஜித் பவார் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரது தலைமையில் ஒரு அணியும், சரத் பவார் ஆதரவு பெற்ற மற்றொரு அணியும், பவார் குடும்ப விரோதியாக கருதப்படும் ரஞ்சன் தவாரே தலைமையில் ஒரு அணியும் 21 பேர் கொண்ட கமிட்டிக்கு வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது.

இதில் மொத்தம் 91 பேர் போட்டியிட்டனர். பாராமதியை சுற்றி கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகள் இத்தேர்தலில் வாக்களித்தனர். இத்தேர்தல் சரத் பவார் மற்றும் அஜித் பவார் இடையேயான செல்வாக்கை நிரூபிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் தலைவர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் 101 வாக்குகள் பதிவாகி இருந்தது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாநில துணை முதல்வர் அஜித் பவார் 91 வாக்குகள் பெற்று தலைவரானார். 40 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் பவார் இத்தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார். தனது அணி சார்பாக வேறு யாரையாவது நிறுத்தினால் அது சரத் பவாருக்கு சாதகமாக மாறிவிடும் என்று கருதி அஜித் பவார் தானே இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். மற்ற உறுப்பினர்களுக்கு பதிவான வாக்குகள் இரவு முழுவதும் எண்ணப்பட்டு வந்தது. முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மாலேகாவ் சர்க்கரை ஆலை பவார் குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டு வந்தது. கடந்த பல சகாப்தமாக பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே சரத் பவார் இந்த சர்க்கரை ஆலையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சரத் பவார் தேசிய அரசியலில் ஈடுபட்டபோது இந்த சர்க்கரை ஆலை விவகாரம், உள்ளூர் அரசியல் போன்றவற்றை அஜித் பவாரிடம் சரத் பவார் ஒப்படைத்து இருந்தார். சரத் பவாருக்கு மகள் மட்டுமே உண்டு என்பதால் அஜித் பவாரிடம் முழு பொறுப்பையும் கொடுத்திருந்தார். இப்போது கட்சியை இரண்டாக உடைத்த அஜித் பவார் கட்சியின் முழு பொறுப்பையும் தன் வசம் எடுத்துக்கொண்டார். அதோடு பாராமதியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் அஜித் பவார் காய் நகர்த்தி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி சிறப்பான வெற்றியை பெற்றுவிட்டது. பாராமதியையும் இத்தேர்தலில் அஜித் பவார் தக்கவைத்துக்கொண்டார்.

இப்போது சர்க்கரை ஆலையும் சரத் பவார் கையை விட்டு சென்றுவிட்டது. இதனால் சொந்த ஊரான பாராமதியில் சரத் பவார் தனது சொந்த செல்வாக்கை இழந்து வருகிறார். அஜித் பவார் பாராமதியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். இதனால் வரும் மாநகராட்சி தேர்தலில் சரத் பவார் மற்றும் அஜித் பவார் தலைமையிலான இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது அல்லது கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து அஜித் பவாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு,”உள்ளூர் தலைவர்கள் மட்டத்தில் 2 அல்லது 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மூத்த தலைவர்கள் இது தொடர்பாக இன்னும் சந்தித்து பேசவில்லை” என்று தெரிவித்தார்.

சரத் பவாரும் சமீபத்தில், இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இணைவது குறித்து அஜித் பவாரும், மகள் சுப்ரியா சுலேயும்தான் முடிவு செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். பா.ஜ.க வும் இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால் கூடுதலாக சில எம்.பி.க்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்று கருதி அதற்கு ஆதரவு கொடுத்து வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *