
மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தின்போது தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தின்போது யாகசாலை, கருவறை, கோபுர விமான பூஜையில் தமிழில் மந்திரங்கள் ஓதுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழ் மொழியில் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டது.