
சென்னை: கடலூர் கூத்தப்பாக்கத்தில் தேவநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் பள்ளியை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 7 அதிகாரிகள் ஜூலை 10-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமாக, கூத்தப்பாக்கத்தில் பல கோடி மதிப்பிலான 6.10 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை அங்கிருந்து அகற்றி, நிலத்தை மீட்டு, கோயில் வசம் ஒப்படைக்கக் கோரி பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் எஸ்.வினோத் ராகவேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கி, நிலத்தை மீட்டு, கோயில் நிர்வாகத்திடம் 6 மாதங்களுக்குள் ஒப்படைக்குமாறு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.