• June 24, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அன்புள்ள மகனே நாங்கள் இங்கு நலமாக இருக்கிறோம். நீயும் உன் மனைவி மற்றும் குழந்தைகளும் நலமா? நீ வெளிநாடு சென்றதிலிருந்து இங்கு எங்களுக்கு பணத்திற்குப் பஞ்சமில்லை. ஆனால், பாசத்திற்குத்தான் நாங்கள் பரிதவிக்கிறோம். உன் பகல் எங்களுக்கு இரவாகவும் எங்கள் பகல் உனக்கு இரவாகவும் மாறிப் போனதால், நினைத்தபோதெல்லாம் அலைபேசியில் அழைக்கக் கூட வழி இன்றிப் போய்விட்டது.

உன் பணிச் சுமைக்கு இடையில் எப்போதேனும் வரும் அழைப்புகள் கூட, சாப்பிட்டீர்களா? மாத்திரைப் போட்டீர்களா? என்ற சம்பிரதாய விசாரிப்புகளோடு முடிந்து போகிறது. ஆகவே இக்கடிதத்தைச் சற்று நீட்டியே எழுதுகிறோம். எங்கள் பேரன் பேத்திகள் வளரும் வேகத்தை வீடியோ காலில் பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கிறது.

உன் தாத்தா பாட்டியோடு நீ விளையாடியதும் கதை கேட்டபடி தூங்கியதும் உனக்கு நன்றாக நினைவிருக்கும் என்று நம்புகிறோம். அப்படி நாங்களும் எங்கள் பேரன் பேத்தியோடு விளையாடவும் கதை சொல்லவும் வேண்டுமென ஏக்கமாக இருக்கிறது.

ஆனால், எங்கள் தமிழே அவர்களுக்குப் புரியாதபோது எங்கள் கதைகளை மட்டும் எப்படிப் புரியவைக்க முடியும். எதிர்காலத்தில் அவர்களுக்கு எங்களைப் பற்றிய நினைவுகள், அலைபேசியின் ஆறு இன்ச் திரை அளவுதான் இருக்கும் என்ற எதார்த்தம் எங்களை இம்சிக்கிறது.

எவ்வளவு உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தாலும் இப்போதெல்லாம் உன் அப்பாவுக்கு சர்க்கரை அளவு குறைவதே இல்லை.

எனக்கும் பிபி ஏறிக்கொண்டேதான் போகிறது. இதன் காரணமாக நாங்கள் மருத்துவமனைக்குப் போகும்போதெல்லாம் உன்னிடமிருந்து அளவான அலைபேசி அழைப்புகளும் அளவுக்கதிகமான பணமும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால் உன் அருகில் அமர்ந்து உன் தோளில் தலை சாய்த்து உரையாடும் இன்பத்திற்கு இவையெல்லாம் ஈடாகாதில்லையா! இனி இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும் கூட, எங்கள் வயோதிகம் இதை எதிர்பார்க்கத்தானே செய்கிறது.

உறவினர்களின் திருமணங்களின் போதும் சில மரணங்களின் போதும் கூட நீ வருவாய் என எதிர்பார்த்த எங்களுக்கு, ஏமாற்றம்தான் மிஞ்சியது. இப்போதும் கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை.

எங்கள் இருவரில் யாரோ ஒருவர் முந்திக் கொண்டால், அதற்காவது நீ வருவாயென உறுதியாக நம்புகிறோம். எங்களில் யாராவது ஒருவருக்காவது உன்னை நேரில் பார்த்து மகிழும் வாய்ப்பு கிடைக்கட்டுமென்ற ஆசைதான் காரணம். அந்த நிகழ்வுக்கு உன் அலுவலகத்தில் நிச்சயம் விடுமுறை கிடைக்குமென்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. கூடிய விரைவில் சந்திப்போம்.

இப்படிக்கு உன் பிரியமான அம்மா அப்பா!

Letter Contest

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *