
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
என் ஆருயிர் அன்பு கண்மணியே
என் கடிதத்தை படித்து அதை ஓரு நிமிடமானும் சிந்தித்து பார்ப்பாய் என்று எழுதுகிறேன். அம்மா களவும் கற்றுமற என்றால் என்னம்மா என்று என்னை சிறுமியாய் கேட்ட ஆர்வமுகம் என் கண்முன்னே வருகிறது. உன் கேள்விக்கு பதிலாக எனக்குத் தெரிந்த எல்லா வேலைகளையும் உனக்கு ஆசையுடன் கற்றுக் கொடுத்தேன். உலகம் புரிந்து கொள்வாய் மனிதநேயம் எவ்வளவு முக்கியம் என்று. ஆனால் இன்று நான் காண்பது.
என்றாவது ஓருநாளானும் உதிரி மல்லிகைப் பூவை தொடுத்ததுண்டா. பல சிக்கல் கோலங்கள் என்னிடம் கற்றுக் கொண்ட நீ ஓரு நாளாவது கோட்டு கோலமாவது போடுகிறாயா? இரவு படுக்க போகும் முன்னர் உனக்கு பல பாசுரங்கள், சுலோகங்கள் சொல்லிவைத்தேனே எப்போதாவது மனம் உருகி சொல்கின்றாயா?
படிக்கும் பொழுதும் உனக்கு பிடித்தமான சுயமாக சிந்தித்து படிப்பை தேர்ந்தெடுத்தாயா? தந்தை சொன்னார் என்பதற்காக பிரைவேட் காலேஜில் பி.ஈ படித்தாய். நல்ல வேலைக்காக
உன் குழந்தைக்கு பிறந்தநாள் உன் கையால் பாயசம் வைத்து அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்றதுண்டா? பார்ட்டி நண்பர்கள் , விருந்து, நுனிநாக்கு ஆங்கிலம் , ஹாய், பய். வந்த தோழிகளில் யாருடனானும் அரைமணி நேரம் வாக்கிங் போய் மனம் விட்டு பேசியதுண்டா?
நீ சுயமாக சிந்தித்து பள்ளியை பார்த்து ,கவர்ன்மெண்ட் பள்ளியை பற்றி விசாரித்ததுண்டா? என் பிரெண்ட்ஸ் , நல்ல பள்ளி , நம் தெருவில் எல்லா பிள்ளைகளும் அங்குதான் படிக்கிறார்கள் என்று உன் பிள்ளைகளை பிரைவேட் பள்ளியில் சேர்த்தாய். ஒரு நாளானும் அவர்கள் நடந்து பள்ளிக்கு போனதுண்டா? வண்டியில் சாலை விதிகளை மீறி அடிடா, புடிடா என்று வண்டியில் குழ்ந்தையை கொண்டு தள்ளுகிறாய். தினமும் அரை மணிநேரம் கூட அதன் பாடத்தை கவனிக்க உன்னால் முடிவதில்லை. டியுஷன் அனுப்பி வைக்கிறாய். அதிலும் உன் கவனம் இல்லை.
என்றானும் ஒருநாளாவது உன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கு இரண்டு நாள் நான் வேலை செய்து கொள்கிறேன் நீ லீவ் எடுத்துக்கொள் என்றோ, கேஸ் சிலிண்டர் வைப்பவரக்கோ , zomato சப்ளை பண்ணுபவர்களுக்கோ தம்பி, தண்ணீர் குடிக்கி்றாயா ,பணம் கொண்டுவரும் வரை பேனின் கீழ் உட்கார் என்று உபசரித்த மனிதாபிமானம் இருந்ததுண்டா. கடையின்முன் வண்டியில் இருந்து இறங்காமல் ஒரு காலை கீழே ஊன்றி கடையை சுற்றியுள்ள முதியவர்களுக்கு இடைஞ்சலாக, பணம் கொடுத்து, பால்பாக்கெட் சாமான் வாங்குகிறாய். உனக்கு மட்டுமா அவசரம். மனித நேயம் எங்கே உன்னிடம்?
மாதம் பஸ்ஸுக்கு ஆகும் பணத்தை நான் டப்பாவில் போட்டு வைத்திருப்பதை , தினமும் பஸ்ஸுக்கு பள்ளி யூனிபார்ம் போட்டுகொண்டவுடன் அதிலிருந்து எடுத்துக்கொண்டு போகும் நீயா கையில் செல்லுடனும், பஸ்ஸில் சில்லரைக்காக கைப்பையை துழாவதுமாக இருக்கிறாய்?
பள்ளி நாட்களில் நீ வீட்டுக்கு வந்தவுடன் , ஒரு கையில் டீ , மறுகையில் சுஜாதாவின் ஜூனோ கதை, மற்றும் ஆனந்த விகடனின் சிறுகதைகளை படிக்கும் ஆர்வமுள்ள நீயா தினம் ஒரு மணிநேரம் கூட புத்தகம் படிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறாய்?
கேட்டால் ஸ்டெரஸ் என்கிறாய். பல குழந்தைகளை பெற்று ,வளர்த்து கணவனின் குறைந்த வருவாயில் குடும்பம் நடத்தி ,ஓய்வு நேரத்தில் பால், தயிர் விற்று, மாடுஉவளர்த்து, இட்லி கடை வைக்கும் பாட்டியை விடவா உனக்குஸ்டெரஸ் . ஓரு நாளாவது பட்டன் போனதை தைத்தோம், சிறிய கிழிசலை தைத்தோம் எனறு செய்கிறாயா? வெளியே செல்லும் முன் ஒரு மணி நேரம் மேக்கப் போட்டு அழகாகும் நீ வீட்டில் தலையை விரித்து , பொட்டு வைக்காமல், தோடு, வளையல்,செயின் கழற்றி சாயம் போன நைட்டியில் நடமாடுகிறாயே என் கண்ணே.
என் கேள்விகளுக்கு பதிலுண்டா மகளே
“ஆனாலும் அபரிமிதமான அன்புண்டு எனக்கு உன்மேல்”
எனக்கு ஓன்று புரியவில்லை “வளர்த்த விதம் தப்பா , வளர்ந்த விதம் தப்பா என்று”
– என்றும் உனக்காக வாழும்
உன் அன்பு அம்மா.
