
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அம்மா,
(பானு சுதாஹரன்,
திருகோணமலை, இலங்கை)
‘அம்மா’ என என் பேனா வரியிடுகையில், என் மன உச்சரிப்பு, ஆறு கடல், ஏழுலகும் உன் ஊனுடம்பு உளைய உளைய நீ உழைத்து; பரந்து, விரிந்த பிரபஞ்சத்தையே நீ எனக்காக வென்றெடுத்து, ஆளுகை செய்யத்தந்த ஒரு சிம்மாசன செருக்குணர்வு, லாவகமானதோர் பெருமூச்சாய் பேராண்மை செய்கிறதம்மா.
உடுமலை, அதிலும் நாம் வாழும், உன் சஞ்சாரம் அடக்கம் கொள்ளும் அந்த சிற்றூரில், சீட்டு சுந்தரி, மளிகைக்கடை மகாலிங்கம், கந்து வட்டி கதிரண்ணை, மாவிடிக்கும் உன் மங்கையர் சங்கம் என அந்தவொரு சிற்றுலகில், நீ கண்ட ஒரு அரைவேக்காட்டு அறிவுக்களஞ்சியத்தை வைத்துக்கொண்டு, ஏதோ உனக்கு வாழ்வியலை விலாவாரியாய் விரித்தாராய்ந்து ஆய்வறிக்கை சமர்ப்பித்த ஒரு தோரணை தான் என்று, உன் செவிப்பறை சேராதவாறு நுண்ணொலியில் ‘நண நண’வென்று நான் நாவைக்கடித்து நறுவிய தருணங்கள் கூட இருந்தன அம்மா.
ஒரு உண்மை கூறுகின்றேன். உன் மடலில் ஒரு வரி என்னை அச்சுறுத்துகின்றது! “இதைத்தான் பல சொற்களினால் நீ சொல்ல முனைந்து தோற்பது போல் தெரிகிறது” என்ற இந்த வரி எனக்குத் தெளிவாகக் கூறுகின்றது, என் மனதில், உன் செவிகள் வரை செல்லவிடாமல் நான் நறுவிக்கொண்ட அனைத்து அசிங்கங்களும், அர்ச்சதைகளும் உன் ஐம்புலன்கள் வழி உன்னை ஆட்டிப்படைத்திருக்கும் என்பதில் அணுவளவும் எனக்கு சந்தேகமில்லை.
அதன் பின்பும், அந்த அர்ச்சதைகளுக்கெல்லாம் ஆரத்தி காட்டி, அதில் என்னை உன் “இதயத்திற்குள் பொத்தி வைத்திருக்க” இறைவனிடம் வரம் கேட்டாயே!
இதுவே என்னை உன்னிடம் சரணடையச் செய்தது. போதுமம்மா, என் உயிரில் கலந்த உன் உன்னத சக்தி, நீ கொண்ட கடலளவு அறிவில், ஓர் கையளவை நானும் காண, என் உடனிருந்து காவல் செய்து கண்காணித்திடும்!
அன்னை என்ற ஆலயத்தில் ஆதிபராசக்தியாய் நீ ஆட்கொண்டு அரவணைத்த இந்த அடிமுட்டாள் அவமானப்படுகையில், ‘அவமானம்’ என்ற சொல்லுக்கு ‘ஆராதனை’ என்றவோர் அர்த்தமும் ‘அன்னை’ என்னும் அகராதியில் உள்ளதை அறியச்செய்கிறது.
அருகிலிருந்தபோது ஆயிரமாயிரம் மைல்கள் தொலைவிலிருந்த உங்களுக்கும் எனக்குமான உறவு, தொலைவில் தான் அணைவினைத் தருகிறது அம்மா; அறிவினைத் தருகிறது.
— உங்களுக்கே
உங்களுக்கான,
மகள்.
