• June 24, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

உறவின் கடிதம் அம்மாவிற்கு .

அம்மா என் மனதில் இருப்பதை உனக்கு ஒரு கடிதமாய் எழுதி தருகிறேன்.

எப்படி ஆரம்பிப்பது எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.. இருப்பினும் சொல்லத் துடிக்கிறது இதயம்.

ஒரு சிறப்புக் குழந்தையாய் உனக்கு நான் பிறந்த போது என்ன இப்படி பிறந்து விட்டான் என்று உலகம் பேசிய போது இவன் என் மகன் இவனுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் நான் கிடைக்கச் செய்வேன் இன்று உலகுக்கு உரக்கச் சொன்னவள் நீ….

என்னோடு எப்போதும் நான் பிறந்த அந்த நொடியில் இருந்து என்னை வலையிட்டு பாதுகாத்தவள் நீ.

நான் நடக்க இயலாத போது எனக்கு பறக்க கற்றுத் தந்தவள் நீ ….

இவனுக்கெல்லாம் …என்று உலகம் பேசிய போது என் மகனுக்கு என்ன குறைச்சல் என் மகன் சிங்கம் போல் என்று எல்லோரும் முன்னும் கர்ஜித்தவள் நீ..

என்னை எல்லோரும் கூட்டிச்செல்ல தயங்கிய போது வா அம்மா உன்னோடு வருகிறேன் என்று பள்ளிக்கூடம் முதல் திரையரங்கு வரை என்னோடு எங்கும் வந்தவள் நீ …

எனது வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு அடியும் நான் மேலே செல்லும்போது பார்த்தீர்களா என் பையனை என்று பெருமைப்பட்டவள் நீ….

இன்னமும் நினைவிருக்கிறது உன்னோடு சேர்ந்து டைட்டானிக் படம் பார்த்தது….

எத்தனையோ திரைப்படங்களுக்கு நீயும் நானும் மட்டும் சென்று இருப்போம்…..

இப்படி எனது பள்ளி காலங்களில் எனக்கு காவலாய் தோழியாய் அனைத்துமாய் இருந்தவள் நீயே…

இன்னமும் நினைவிருக்கிறது சென்னைக்கு நான் திருச்சியில் இருந்து கிளம்பிய போது ஒரு பறவை தனது கூட்டில் இருந்து தனது குஞ்சை பறந்து போ என்று சொல்லும்படி பேருந்து நிலையத்தில் நீ அழுதது… உன்னை நான் இல்லாமல் எங்கும் அனுப்பியதில்லை …

முதல் முறை நீ என்னை விட்டுப் போகிறாய் உனக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற ஆசையிலேயே நான் அனுப்புகிறேன் என்று சொன்னவள் நீ….

என்னால் முடிந்ததை நான் இதுவரை உனக்கு செய்து விட்டேன் இனி நான் உன்னை என்னோடு வைத்துக்கொண்டு உனக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் தடுக்க மனமில்லை பறந்து போ என்றாய்…. உயர உயர நான் பறந்து கொண்டிருக்கிறேன்

எனது ஒவ்வொரு உயரத்திலும் நீ பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாய்….

உனக்கென்று நீ எதுவும் கேட்டதில்லை என்னிடம் …

காபி குடித்தாயா சாப்பிட்டாயா என்பதை தவிர நீ எதுவும் கேட்டதில்லை…

எனக்கு திருமணம் ஆகிய போதும் குழந்தை பிறந்த போதும் உன் மனம் அப்படி ஒரு நிறைவை கண்டது என் மகனுக்கு எல்லாம் கிடைத்துவிட்டது என்பது போல்…

எப்போதும் போலத்தான் அந்த காலைப் பொழுது எனக்கு விடிந்தது அன்று.

ஊரில் இருந்து போன் வந்தது அப்பா நீ கண் விழிக்கவில்லை என்று சொன்னார்… திரும்பி வந்து விடுவாய் என்ற நம்பிக்கையிலேயே நான் காத்துக் கிடந்தேன் திடீரென்று சொன்னார்கள் நீ இல்லை என்று…

முந்திய நாள் இரவு நீ என்னிடமும் என் மகளிடமும் பேசியது நினைவிற்கு வந்தது .

என் மகன் தங்கமான குழந்தை என்னிடம். மட்டும் காசு இருந்திருந்தால் என் மகனை நான் என்னோடு எப்போதும் வைத்திருப்பேன் என்று சொன்னாய்….

இரவில் பேசிய நீ காலையில் இல்லை என்றார்கள்…

பால் ஊற்றும் பால்காரர் சொன்னார் அதிகாலையில் அம்மாவின் குரல் கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது யாரையோ யாரையோ கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என்று…

அப்போதுதான் எனக்கு மிகவும் வலித்தது …

யாருமே அருகில் இல்லாமல் நீ உயிர் போராட்டம் நடத்தி இருக்கிறாய்…நிச்சயம் நீ என்னை கூப்பிட்டு இருப்பாய் என்னை நினைத்து இருப்பாய் அப்பாவை நினைத்து இருப்பாய் அண்ணனை நினைத்து இருப்பாய் உன் இறுதிக் கண்ணீரில் என் முகம் நிச்சயம் உனக்கு வந்திருக்கும்.

எப்போதும் என் கூடவே இருந்த உன் இறுதி தருணத்தில் நான் உன்னோடு இல்லாமல் போய்விட்டேனே அம்மா! .

உனக்கு என்ன செய்தது என்ன நடந்தது என்னம்மா ஆனது என்று எண்ணி தினம் தினம் இப்போது வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை இந்த கடிதம் உன்னிடம் சேரும் என்றால் என்னிடம் ஒரே ஒரு ஆசைதான்.. உனக்கு என்ன நடந்தது என்று கேட்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது …

எல்லோரும் சொல்லுகின்றார்கள்.. அம்மா இந்நேரம் மறுபிறவி எடுத்து இருப்பார் என்று .

அப்படி இருந்தால் நீ எங்கு இருக்கிறாய் உன்னை என்னால் மறுமுறை பார்க்க முடியுமா? இருவருக்கும் அதிகாலை வேளையில் உறக்கம் வரவில்லை என்றால் காபி குடித்தபடி ஊர் கதைகள் பேசி இருக்கிறோம்..‌

இப்போது உன் கையால் ஒரு காபி குடிக்க முடியுமா?

உன் கையால் ஒரு காபி குடிக்க என்னை ஒரு ஜென்மம் காக்க வைத்து விட்டாயே அம்மா!

இரா.ரகுராமன்

Letter Contest

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *