• June 24, 2025
  • NewsEditor
  • 0

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கோடியூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும் வாரச் சந்தை நடைபெறும். இந்த பகுதி காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மக்களுக்கு முக்கிய இடமாக விளங்குகிறது.

ஆனால் இந்தச் சந்தையின் பின்புறத்தில் மருத்துவக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் என குவிந்துகிடந்தன, இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் என அனைவரும் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டனர்.

சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மூக்கைப் பிடித்தபடி கொண்டு தான் உணவுப் பொருட்கள் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இது குறித்துக் கேட்டபோது, “நாங்கள் இங்கு குப்பைகள் கொட்டுவதில்லை. பிளாஸ்டிக் பொருட்களும் பயன்படுத்துவதில்லை. சந்தைக்கு வருபவர்களில் பெரும்பாலோர் துணிப்பைகளுடன் வருகின்றனர். இங்கு காணப்படும் குப்பைகள் என்றால், வெங்காயத் தோல், காய்கறித் துண்டுகள் போன்றவை மட்டுமே.

ஆனால், மருத்துவக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், மூட்டை மூட்டையான குப்பைகள் எப்படி இங்கு வருகின்றன என்பது தெரியவில்லை. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். ஒரு பக்கம் சந்தை நடக்க, மறுபக்கம் குப்பைகள் குவிந்தால், எப்படி வியாபாரம் செய்வது? இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டால் யார் பொறுப்பு? இது எங்கள் வியாபாரத்தை முற்றிலும் பாதிக்கிறது.

மேலும், இந்தப் பிரச்னையைத் தடுக்க முயற்சித்து, எச்சரிக்கைப் பலகைகள் வைத்தோம், சிலர் பொறுப்பற்று குப்பைகளைக் கொட்டுகின்றனர். ஜோலார்பேட்டை நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், ‘இதோ, அதோ’ என்று பதிலளித்து இழுத்தடிக்கின்றனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இந்த இடத்தை உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அங்கிருந்த‌ பொதுமக்களிடமும் , வியாபாரிகளிடமும் பேசியும், நேரடியாக விசிட் செய்தும் இந்த அவலநிலை குறித்து விகடன் தளத்தில் ”கோடியூர்: வாரச்சந்தை நடைபெறும் இடத்துக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள்; முகம் சுளிக்கும் பொதுமக்கள்!” என்ற‌ தலைப்பில் செய்தி ஒன்றினை ஜூன்20-ம் தேதி வெளியிட்டிருந்தோம்.

இந்த விவகாரத்தை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தோம். விகடன் செய்தி எதிரொலியாக, அதிகாரிகள் செய்தி வெளியான மூன்றே நாள்களில் 23/06/25 அன்று விரைந்து குப்பைகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இது போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தை, அதிகாரிகள் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மக்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *