
இயற்கை அளித்திருக்கும் பெருங்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மேற்கு தொடர்ச்சி மலை அரியவகை பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள், நீர் வாழ்வுகள், இரு வாழ்வுகள் , ஓரிட வாழ்வுகள், ஊர்வன போன்றவற்றின் தாய் மடியாக இருந்து வருகிறது. மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் வன வளம் மிகுந்த பல்லுயிர் பெருக்க மண்டலமாக விளங்கி வருகிறது.
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் வன உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் குறித்து பல ஆண்டுகளாக தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், கண்டறியப்படாத வன உயிரினங்களும் தாவர வகைகளும் இருப்பதாக ஆய்வாளர்களே அதிசயித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் ஓரிட வாழ்வியான டிராவிடோ கெக்கோ குன்னூர் ( dravidogecko coonoor) என்கிற புதிய பல்லி இனம் ஒன்றை வன உயிரின ஆய்வாளர்களான அபினேஷ், நவீன், ஸ்ரீகாந்தன், பாபு, கணேஷ் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.
இதன் பின்னணி குறித்து தெரிவித்த வன உயிரின ஆய்வாளர் , “மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதிலும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கும் பல்லிகள் தொடர்பான ஆய்வுகளில் மொத்தம் 8 வகையான டிரவிடோ கெக்கோ இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் புதிதாக ஒரு பல்லி இனத்தைக் கண்டோம்.

ஹெமிடாக்டைல்ஸ் பல்லி இனமாக இருக்கலாம் என்ற முதலில் கருதினோம். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தான் டிரவிடோ கெக்கோ குடும்பத்தைச் சேர்ந்த பல்லி இனம் என்பதை கண்டறிந்தோம். குன்னூர் பகுதிகளில் மட்டுமே காணப்படும் இந்த டிரவிடோ கெக்கோ பல்லி இனத்திற்கு குன்னூர் பெயரைச் சேர்த்து டிரவிடோ கெக்கோ குன்னூர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சர்வதேச வன உயிரின ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் இதழிலும் அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பல்லி இனம் வனப்பகுதிகள் மட்டுமின்றி மனித நடமாட்டம் உள்ள நகர்ப்புறங்களிலும் காணப்படுகிறது. கட்டட விரிசல்கள், கிளைகளின் பிளவுகள், மரப்பட்டை இடுக்குகளில் அதிகம் காணப்படுகிறது.

குன்னூர் பகுதியில் மட்டுமே காணப்படுவதால் அழியும் பட்டியலில் உள்ள இனமாக இருக்கிறது . வாழ்விட சிதைப்பு, காடழிப்பு, காலநிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இந்த புதிய பல்லி இனம் கண்டறியப்பட்டதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையில் டிரவிடோ கெக்கோ பல்லி இனத்தின் எண்ணிக்கை 9- ஆக உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.