• June 24, 2025
  • NewsEditor
  • 0

மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வரை புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஜப்பான் நாட்டின் தொழில் நுட்பம் மற்றும் நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்டு வரும் இத்திட்டத்திற்கான பணிகள் குஜராத் எல்லைக்கு உட்பட்டபகுதியில் வேகம் எடுத்துள்ளது. குஜராத் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இத்திட்டத்திற்காக பெரும்பாலும் தூண்கள் அமைக்கப்பட்டு ரயில் நிலையங்களும் கட்டப்பட்டு வருகிறது.

மும்பையில் இத்திட்டத்திற்கு ரயில் நிலையம் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் கட்டப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மகாராஷ்டிரா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புல்லட் ரயில் திட்ட பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் முழுவேகத்தில் நடக்கிறது. மும்பையில் இத்திட்டத்திற்கு பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் முதல் ஷில்பாடா வரை 21 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட இருக்கிறது.

சுரங்கம் தோண்டும் இயந்திரம்

இதில் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலுக்கு அடியில் சுரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இச்சுரங்க பாதை 25 மீட்டரில் இருந்து 114 மீட்டர் ஆழத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சுரங்கம் அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் திட்டமிட்ட காலத்திற்குள் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புல்லட் ரயில் திட்டத்திற்கு மும்பையில் சுரங்கம் அமைப்பதற்கான பணியை அப்கான்ஸ் என்ற நிறுவனம் ரூ.6,397 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது. அந்நிறுவனம் குறிப்பிட்ட காலத்துக்குள் சுரங்கத்தை அமைத்து கொடுக்கவேண்டும். சுரங்கம் அமைப்பதற்கான இயந்திரங்களை பூமிக்குள் இறக்குவதற்கு தேவையான குழிகளை மூன்று இடங்களில் வெட்டி வருகிறது.

ஆனால் சுரங்கம் தோண்டுவதற்கான இயந்திரங்கள் இன்னும் வந்து சேரவில்லை. அவை சீனாவில் உள்ள குவாங்சோ துறைமுகத்தில் கிடக்கிறது. புல்லட் ரயிலுக்கு சுரங்கம் தோண்டுவதற்காக மூன்று இயந்திரங்களை ஜெர்மனை சேர்ந்த ஹெர்ரென்க்நெக்ட் என்ற நிறுவனம் சீனாவில் ஆர்டர் செய்து இருந்தது. அந்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு துறைமுகத்திற்கும் கொண்டு வரப்பட்டு விட்டது. ஆனால் 2020ம் ஆண்டு இந்தியா சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கு பிரச்னையால் உறவு மோசமடைந்துள்ளது. இப்பிரச்னையால் இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை மத்திய அரசும், மாநில அரசும் அடுத்தடுத்து ரத்து செய்தன.

அதோடு சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.இந்த பிரச்னையால் சீனாவில் துறைமுகம் வரை வந்துள்ள சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கப்பலில் ஏற்றப்படாமல் துறைமுகத்தில் முடங்கி கிடக்கிறது. அதற்கு சீனா அரசு ஒப்புதல் கொடுக்க மறுத்து வருகிறது. சமீபத்தில் தான் சீனா மற்றும் இந்திய அதிகாரிகள் சந்தித்து பேசி மீண்டும் இரு நாடுகளிடையே விமான போக்குவரத்து, வர்த்தக சேவையை தொடங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. சீனாவில் ஆர்டர் செய்யப்பட்ட மூன்று இயந்திரங்களில் இரண்டு இயந்திரங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவிற்கு வந்திருக்கவேண்டும். ஒரு இயந்திரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வந்திருக்கவேண்டும்.

ஆனால் எந்த வித காரணத்தையும் சொல்லாமல் சீனா அரசாங்கம் இந்த இயந்திரங்களை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் இப்பிரச்னையை ரயில்வே நிர்வாகம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறது. சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மட்டுமல்லாது கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்களையும் இறக்குமதி செய்ய தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுவிட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அடுத்த சில மாதங்களில் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மும்பை வந்துவிடும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டாலும் முதல் கட்டமாக குஜராத் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் புல்லட் ரயிலை இயக்க தேசிய அதிவிரைவு ரயில் கழகம் முடிவு செய்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *