• June 24, 2025
  • NewsEditor
  • 0

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை (ஜூன் 25) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 26) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 10.25 மணிக்குப் புறப்படும் சாய்நகர் சீரடி (SNSI) எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின், மதியம் 12.10 மணிக்கு காட்பாடி ரயில் நிலைய சந்திப்பை வந்தடைகிறார். காட்பாடியில் தி.மு.க பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் ஆகியோரின் தலைமையில் தி.மு.க-வினர் முதலமைச்சரை வரவேற்கின்றனர். அதைத்தொடர்ந்து, வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன் பிறகு முதல் நிகழ்ச்சியாக, வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்துவைப்பதாக சொல்லப்பட்டது. கட்டுமான பணிகள் முழுமைப்பெற்றாலும், பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான எஞ்சிய பணிகளை முடிக்கவும் அனைத்துத் துறை அலுவலர்களும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றனர்.

அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை

இந்த மருத்துவமனை திறப்பு விழாவையொட்டியே முதலமைச்சரின் 2 நாள் பயணமும் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், பணிகள் முழுமைப் பெறாத காரணத்தினால், முதலில் வெளியான முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி பட்டியலில் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா இடம் பெறவில்லை. நேற்று காலை வரை அது குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்புமே வெளியாகவில்லை. மதியம் 12 மணிக்குப் பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தகவல் பகிரப்பட்டது. அதில், பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் திறந்துவைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்ய உத்தரவிடப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் வேலூர் வந்து மருத்துவமனையைப் பார்வையிட்டு திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தினார்.

இன்று மதியம் வரை மருத்துவமனையும் திறப்பு விழாவிற்காக தயாராகி வந்தன. அதற்குள்ளாக, மீண்டும் முதலமைச்சர் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டு, மருத்துவமனை திறப்பு விழா மட்டும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சில அரசியல் காரணங்கள் சொல்லப்பட்டாலும், `மருத்துவமனை செயல்படுவதற்கான பல்வேறு ஒப்புதல்கள் இன்னும் பெறப்படவில்லை; மருத்துவ உள்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படவில்லை. எனவேதான் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் திறந்துவைத்தாலும் மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டுவர முடியாது’ என்கிற காரணமும் சொல்லப்படுகிறது. `அவசரகதியில் மருத்துவமனையை திறப்பது சரியாக இருக்காது’ எனவும் ஆலோசிக்கப்பட்டு, முடிவுகள் திடீர் திடீரென்று மாற்றி மாற்றி எடுக்கப்படுவதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் `முதலமைச்சர் ஸ்டாலின், பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவை ரத்து செய்துவிட்டு, நாளை மதியம் நேராக விருந்தினர் மாளிகை செல்கிறார்’ என்கிற மாறுபட்ட தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகி, தலைசுற்றலை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஆனாலும், மருத்துவமனை திறப்பு விழா நடைபெறுமா, இல்லையா? என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

அதிகாரிகளுமே தீவிர குழப்பத்தில்தான் இருக்கின்றனர். `இன்று மாலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து மருத்துவமனை கட்டமைப்புகளை ஆய்வு செய்யவிருக்கிறார். அதன் பிறகே திறப்பு விழா குறித்த எந்தவொரு தகவலும் உறுதியாக தெரியவரும்’ என்கின்றனர் அலுவலர்கள்.

மருத்துவமனை திறப்பு விழா நடந்தாலும், நடைபெறாவிட்டாலும் திட்டமிட்டபடி நாளை மாலை 5 மணியளவில், விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு அணைக்கட்டு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். வேலூர் மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார் ஏற்பாட்டில் கெங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தையும், கருணாநிதி வெண்கல சிலையையும் திறந்துவைக்கிறார் முதலமைச்சர்.

கலைஞர் அறிவாலயம்

இதையடுத்து, சாலை மார்க்கமாக திருப்பத்தூர் புறப்பட்டுச் செல்கிறார். செல்லும் வழியில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க-வினர் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு 8.05 மணியளவில், திருப்பத்தூரில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் திறந்து வைத்துவிட்டு, பிறகு திருப்பத்தூர் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, அரசு நலத்திட்டங்களை வழங்குகிறார். அதைத்தொடர்ந்து, 12.18 மணியளவில், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸில் சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முதலமைச்சரின் வருகையையொட்டி, நாளை மற்றும் நாளை மறுநாளும் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தடையைமீறி ட்ரோன் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதேசமயம், வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *