
மதுரை: “தமிழகத்தில் கோயில் விழாக்களில் எவ்வித பாகுபாடும் பார்ப்பதில்லை. கண்டதேவி தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை. அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர்,” என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த கேசவமணி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக்கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்றும், அனைத்து சமூக மக்களையும் இணைந்து அவர்கள் பங்களிப்புடன் திருவிழா நடத்த வேண்டும் என 2014-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.