
சமீபத்தில் நடந்த ‘குட் டே’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இயக்குநர் ராஜுமுருகன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எனப் பலரும் தங்களுக்கு இருந்த குடிப் பழக்கம் பற்றியும், அதனை நிறுத்தி விட்டது குறித்தும் மனம் திறந்து பேசினார்கள்.
அவர்களை அப்படிப் பேச வைத்த படமாக ‘குட் டே’ படம் இருந்ததாகச் சொல்லவே, படத்தின் கதை நாயகனும், தயாரிப்பாளருமான பிரித்திவி ராமலிங்கத்திடம் பேசினோம்.
அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, பக்ஸ், போஸ் வெங்கட், முருகானந்தம், ஜீவா சுப்பிரமணியம் இவர்களுடன் கதை நாயகனாக நடித்திருக்கிறார் தயாரிப்பாளரான பிரித்திவிராஜ் ராமலிங்கம்.

உதவி இயக்குநராக இருந்து ’96’, ‘மெய்யழகன்’ படங்களின் இணை இயக்குநராகவும் இருந்தவர் பிரித்திவி. ‘குட் டே’ குறித்து இங்கே அவர் மனம் திறக்கிறார்.
”’குட் டே’வை ராஜுமுருகன், பாலாஜி தரணிதரன் என இயக்குநர்கள் பலரும் பார்த்துட்டு பாராட்டினாங்க. ஒரு இரவில் நடக்ககூடிய கதைதான் ‘குட் நைட்’.
ஒரு மனிதனின் ஒருநாள் வாழ்க்கைதான் படம். இந்தப் படம் போதையைப் போற்றிப் பேசுவதில்லை. போதையிலிருக்கும் ஒருவரின் வலியையும், அவரைச் சுற்றியவர்களின் துயரங்களையும் பத்தி பேசும்.
ஏன்னா மனிதர்கள்ல சிலர் மாதத்தில் ஒருநாள் மட்டும் மது அருந்தக்கூடியவர்களாக இருப்பாங்க. அப்படி அந்த ஒருநாள்ல குடிக்கறவன், சமூகத்தின் மீதான மொத்த கோபத்தையும் காட்டிடுவான். அப்படிப்பட்ட சாந்தகுமார் கதாபாத்திரத்தில் நான் நடிச்சிருக்கேன்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா என் நண்பர். சமூகத்தின் மீது அதிக கோபங்கள் உள்ளவர். இப்ப அவர் குடிப்பழக்கத்தை விட்டுட்டார். அவரோட கேரக்டர்ல இருந்துதான் இந்தக் கதை உருவாகியிருக்குனு சொல்லலாம். நடிகராகணும்தான் சினிமாவுக்குள் வந்தேன்.
தர்மபுரி பக்கம் ஒரு சின்ன கிராமத்துல இருந்து ரொம்பவும் எளிய குடும்ப பின்னணியில் இருந்து இந்த இடத்துக்கு வந்திருக்கேன். என்ஜினீயரிங் படிக்கும் போது, சினிமா ஆசை வந்திடுச்சு. அப்படியே படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, நடிக்க வந்தேன்.
சினிமாவில் என் பயணம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக ஆரம்பித்தது. ‘எம்.குமரன் s/o மகாலட்சுமி’யில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக நடிச்சிருக்கேன்.
‘பதினாறு’ படத்தை இயக்கிய சபா சாரிடம் உதவி இயக்குநரானேன். அதன் பிறகு ’96’, ‘மெய்யழகன்’ படத்தில் இணை இயக்குநராக வேலை செய்திருக்கேன். ’96’ படத்தின் இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தா இசையமைச்சிருக்கார்.

இத்தனை வருட சினிமா அனுபவத்தில் வலிகள், வேதனைகளை விட, நல்ல மனிதர்களைச் சம்பாதிச்சிருக்கேன்னுதான் சொல்ல விரும்புறேன். ஏன்னா, சென்னையில் தண்ணீர் கேன் விநியோகிக்கிற வேலையில்கூட இருந்துருக்கேன். ஆனா, சினிமா எனக்குப் பல சந்தோஷங்களைக் கொடுத்திருக்கு.
விஜய் சேதுபதி சாரோட ‘துக்ளக் தர்பார்’ படத்தின் தயாரிப்பில் வேலை செய்ததில் படம் தயாரிக்கணும்னு ஆசை வந்திடுச்சு. ‘குட் டே’வில் நடிக்கறதுக்கு முன்னாடி நடிப்பைச் சாதாரணமா நினைச்சிட்டேன். ஆனா, நடிக்கும் போதுதான் அதில் உள்ள சவால்களை உணர்ந்தேன்.
இயக்குநர் ராஜுமுருகன் இந்தப் படம் பற்றி சொல்லும்போது, “இந்தப் படம், ஒரு குடிகாரனின் வாழ்க்கையை ‘glorify’ செய்வதற்கல்ல. குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக, உளவியல், பொருளாதார வேர்கள் என்னவென்று கேட்கும் படம்” என்று பேசியிருந்தார் அவர். படம் பார்க்கும் போது, அதை நீங்களும் உணர்வீர்கள்” என்கிறார் பிரித்திவி ராமலிங்கம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…