
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (45). இரவது மனைவி சிந்தனை செல்வி (25).
இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வந்த கலியமூர்த்திக்குக் குடிப்பழக்கம் இருந்துள்ளது.
வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும்போது தினமும் குடித்து விட்டு வந்து சிந்தனை செல்வியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.
பல சமயம் சண்டை எல்லை மீற கலியமூர்த்தி போதையில், சிந்தனை செல்வியை அடித்து உதைப்பாராம். தெருவில் உள்ளவர்கள் இதைத் தட்டிக் கேட்டால் அவர்களையும் தகாத வார்த்தைகளில் திட்டுவாராம்.
இந்தநிலையில் கடந்த 22ம் தேதி இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த கலியமூர்த்தி தன் மனைவி சிந்தனை செல்வியை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார். வலி தாங்க முடியாமல் அவர் கதறியிருக்கிறார்.
“உன்னால எனக்கும், பிள்ளைகளுக்கும் நிம்மதியே இல்லாமல் போச்சு, தினம் தினம் உங்கிட்ட கொடுமையை அனுபவிக்க முடியலை. நீ திருந்துவனு பார்த்தேன். ஆனால் திருந்துறது மாதிரி தெரியலை” என்று சிந்தனை செல்வி பேசியுள்ளார்.
அப்போதும் கலியமூர்த்தி அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து, “இனிமே குடிப்பியா, பிரச்னை செய்வீயா” என்று கேட்டு, கலியமூர்த்தி கழுத்தில் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கலியமூர்த்தி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சிந்தனை செல்வியைக் கைது செய்தனர்.
கணவன் இறந்து விட்டார், மனைவி சிறையில் இருக்கிறார். தற்போது அவர்களின் பிள்ளைகள் இரண்டு பேரின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.