
மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் ரூ.172 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால், வரும் மார்ச் மாதத்தில் பணிகள் நிறைவு பெறும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ள நிலையில், பணிகளை மேலும் தாமதப்படுத்தாமல் விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி அமைந்துள்ளது. சுமார் 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் கொள்ளளவாக 24.30 அடி வரையில் தண்ணீர் சேமிக்க முடியும் என்ற நிலை உள்ளது. மேலும், ஏரியின் நீரை நம்பி மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கடப்பேரி, கத்திரிச்சேரி, மதுராந்தகம், வளர்பிறை, முள்ளி, முன்னூத்திக்குப்பம், விளாகம், முருக்கஞ்சேரி, விழுதமங்கலம் உட்பட 36 கிராமங்களில் மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், மதுராந்தகம் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கிராமங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.