
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் போர்டோ, நடான் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி உடனடியாக கொடுக்கப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “கடந்த 12 நாள்கள் நடைபெற்ற போரில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இரு நாடுகளும் தங்களின் உறுதிப்பாடு, தைரியத்தை வெளிப்படுத்தின. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இரு நாடுகளுக்கிடையே போர்நிறுத்தத்தை அறிவிக்கிறேன்” என்று தனது ட்ரூத் சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் ட்ரம்ப்பின் இந்த போர் நிறுத்த அறிவிப்பை இருநாடுகளும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் – ஈரான் இருநாடுகளும் எந்தவொரு அறிவிப்பையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “இஸ்ரேல்தான் ஈரான் மீது தாக்குதலை நடத்தி போரைத் தொடங்கியது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்போதைக்கு, போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ‘ஒப்பந்தமும்’ போடப்படவில்லை. இஸ்ரேல் ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத தாக்குதல்களை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு இஸ்ரேல் மீதான எங்கள் பதிலடியைத் தொடரமாட்டோம். அதன்பிறகு போர் நடத்துவதற்கும் எந்தவொரு காரணமும் எங்களுக்கில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
As Iran has repeatedly made clear: Israel launched war on Iran, not the other way around.
As of now, there is NO "agreement" on any ceasefire or cessation of military operations. However, provided that the Israeli regime stops its illegal aggression against the Iranian people no…
— Seyed Abbas Araghchi (@araghchi) June 24, 2025
இருப்பினும், இப்போதைக்கு தாக்குதல்களை நிறுத்துவதாக ஈரான் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “இஸ்ரேலின் மூர்க்கமான தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுத்து அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து போராடினர் ஈரானிய இராணுவப் படையினர். ஈரானியர்களையும், தங்களின் நாட்டையும் காக்க எதிரியின் எந்தவொரு தாக்குதலுக்கும் கடைசி நிமிடம் வரை, தங்களின் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரையிலும் போராடத் தயாராக இருந்தனர் ஈரானிய இராணுவப் படையினர். உங்களின் துணிச்சலுக்கு நன்றி கூறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
போர் நிறுத்தம் குறித்து இருநாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ‘இஸ்ரேல் தரப்பில் தாக்குதல் நடத்தினால் அதற்கான பதிலடியை கொடுப்போம்’ என்பதே ஈரானின் நிலைப்பாடாக இருக்கிறது.