
இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் 471 ரன்கள் குவித்தது.
அதேபோல், பவுலிங்கில் பும்ரா, ஜடேஜா சிறப்பாக பந்துவீசிய போதும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரன்களை வாரி வழங்க, ஒல்லி போப், ஹாரி ப்ரூக்கின் அதிரடியால் 465 ரன்கள் குவித்தது.
வெறும் 6 முன்னிலையுடன் நேற்று இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் குவித்தது. ராகுலும் கில்லும் களத்தில் நின்று கொண்டிருந்தனர்.
இன்று, நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார் கில்.
இந்த நேரத்தில்தான், ராகுலுடன் கைகோர்த்தார் பண்ட். ஒருமுனையில் க்ளாஸி ஸ்டைலில் 202 பந்துகளில் ராகுல் சதமடித்தார்.

மறுமுனையில் தனக்கே உரிய அதிரடி பாணியில் இந்த டெஸ்டில் இரண்டாவது சதத்தை அடித்தார் பண்ட்.
200 ரன்களை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ராகுல் – பண்ட் பார்ட்னர்ஷிப், சோயப் பஷீர் வீசிய 71-வது ஓவரில் பண்ட்டின் விக்கெட்டால் 195 ரன்களில் முடிவுக்கு வந்தது.
அடுத்து, இந்த டெஸ்ட்டின் மூலம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன கருண் நாயர் களமிறங்கினார்.
ராகுல் – கருண் நாயர் ஜோடி நிதானமாக ஆடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில், பிரைடன் கர்ஸ் பதில் இன்சைட் எட்ஜில் போல்டாகி 137 ரன்களில் அவுட்டானார் ராகுல்.
தொடர்ந்து வோக்ஸ் வீசிய அடுத்து ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து 20 ரன்களில் ஏமாற்றமளித்தார் கருண் நாயர்.
Target acquired: 3️⃣7️⃣1️⃣
Missed Josh Tongue's three wickets in four balls?
Watch now with our catch-up highlights!
— England Cricket (@englandcricket) June 23, 2025
அடுத்துவந்த ஷர்துல் தாக்கூரும் முதல் இன்னிங்ஸ் அவுட்டானதைப் போலவே ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேறினார்.
இந்தக் கேட்சின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபீல்டராக அதிக கேட்ச் பிடித்தவரான ராகுல் டிராவிட்டை (164 போட்டிகளில் 210 கேட்சுகள்) பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார் ஜோ ரூட் (154 போட்டிகளில் 210 கேட்சுகள்).
ஷர்துல் தாக்கூர் அவுட்டான அடுத்த பந்திலேயே முகமது சிராஜ் அவுட்டாக, ஒரு பந்து விட்டு அடுத்த பந்தில் பும்ரா கிளீன் போல்டனார்.
ஜோஷ் டங் வீசிய அந்த ஒரே ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகள் விழுந்தது.
அடுத்து 10 பந்துகள் தாக்குபிடித்த பிரசித் கிருஷ்ணா 11-வது பந்தை தூக்கியடித்து 0 ரன்னில் அவுட் ஆனார்.
364 ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆனது. கடைசி 31 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேரம் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது.
இன்னும் கடைசி நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 350 ரன்கள் தேவை.