
தமிழ் சினிமாவில் `ரோஜா கூட்டம்’, `மனசெல்லாம்’, `பார்த்திபன் கனவு’, `நண்பன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரை விசாரித்து வருகின்றனர்.
போதைப்பொருள் வழக்கு ஒன்றில் பிரசாத் என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடம் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதாகத் தெரியவந்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து, ஸ்ரீகாந்தை போலீஸார் ஒருபுறம் விசாரிக்க, மறுபக்கம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியிருக்கிறது.
பின்னணி விவரம்:
முன்னாள் அ.தி.மு.க பிரமுகர் பிரசாத் என்பவரிடம் போலீஸார் போதைப்போருள் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அதில், பிரதீப் என்பவர் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
அதன்படி, தனிப்படை போலீசார் பீரதீப்பை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில், ஸ்ரீகாந்த், பிரசாத் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற பார்ட்டிகளுக்கு பிரதீப் போதைபொருள் சப்ளை செய்திருப்பது அவரின் வாக்குமூலத்தில் கண்டறியப்பட்டது.

குறிப்பாக பிரதீப் தனது வாக்குமூலத்தில், ஸ்ரீகாந்தும் மற்றொரு நடிகரும் பிரசாத் மூலமாக தன்னிடமிருந்து கொக்கைன் பயன்படுத்தியதை நேரடியாகவே பார்த்திருப்பதாகவும், 40 முறை பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்திருப்பதாகவும் தெரிவித்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த வாக்குமூலத்தின்படி, மற்றொரு நடிகரிடமும் போலீஸார் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.