• June 23, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

கைபிடித்து நடக்க வைக்க எப்போதும் நீங்கள் அருகில் இருந்ததில்லை. தாயின் கையை மட்டுமே இருகப்பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி நடக்கிறேன் இந்த வாழ்க்கை எனும் பாதையில் இத்தனை வருடங்களாக.

உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாதா என்று எல்லோரும் சிரிக்கும்போது…ஓட்டக்கத்துக்குடுத்து விழும்போது பின்னிருந்து பிடித்துக்கொள்ள தந்தை இருந்தது இல்லை என்று எப்படி தெரியும் அவர்களுக்கு.

முதல் மதிப்பெண் வாங்கி உலகை வென்ற உற்சாகத்தோடு வீடுவந்து சேர்ந்தேன்.

முகமெல்லாம் அடிவாங்கி உடைந்து கிடப்பால் அம்மா,அப்போதே உடைந்து போயின அத்துனை கனவுகளும்.

பேச்சுப்போட்டியில் பரிசுப்பெற்று பட்டாம்பூச்சியாய் பறந்து வருவேன் உங்களிடம் காட்டுவதற்கு, எழுப்ப எழுப்ப மது எனும் மயக்கத்தில் கிடப்பீர்கள், மடிந்து போயின என் சிறகுகள்.

பள்ளிக்கூடத்தில் பணம் கட்டாமல் பாதி நாள் வகுப்பு வாசலிலேயே நிற்க வைக்கப்பட்டுள்ளேன், கண்ணீருடன் எழுதியதெல்லாம் வாழ்க்கை பாடங்கள் தான். எதற்கும் ஆசைப்பட தகுதி இல்லையாம் எனக்கு, தந்தை சரியில்லா பிள்ளையானதால்.

உலகை ஜெயித்துவிட நினைத்த எனக்கு, நீங்கள் கொடுத்த வரம் “வறுமையும், தந்தையில்லா வெறுமையும்”.

அப்பாக்கள் அற்ற பிள்ளைகளுக்கு தான் தெரியும் வாழ்க்கை வலியானது என்றும், வீராங்கனைகள் பிறக்கப்படுவதில்லை, பின்னாளில் வளர்க்கப்படுகிறோம் .

மறுஜென்மம் என்றிருந்தால் எனக்கு பிள்ளையாக பிறந்திடுங்கள், வளர்த்துக் காட்டுகிறேன் அளவற்ற அன்போடும், எப்போதும் உடனிருந்தும்.

மீண்டும் மறுபிறவியில் உங்களுக்கே மகளாகிறேன்,அதே அன்பினை அப்படியே அளித்திடுங்கள்.வேரேதும் கேட்கவில்லை பெரிதாக.வாழ்க்கை இருந்திருக்கும் சற்று எளிதாக.மறந்தீரோ பெற்ற பிள்ளையை வளர்த்திட …வலிகள் தீருகின்றன எழுதிட…!!!

இப்படிக்கு (உங்கள் நகல்)

மு.க.கோகிலா.

Letter Contest

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *