
2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு நிச்சயம் நமது வீட்டுக் கடன்களில் பிரதிபலிக்கும்.
அதாவது, இந்த சமயத்தில் புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதங்கள் குறையும். ஏற்கனவே, ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கும் இது ஒரு பம்பர் வாய்ப்பு.
இந்த மாதத் தொடக்கத்தில், இந்திய ரிசர்வ் ரெப்போ வட்டி விகிதத்தை 5.50 சதவிகிதமாக குறைத்துள்ளது. இந்தக் குறைப்பை எப்படி நாம் ஸ்மார்ட்டாக பயன்படுத்துவது என்பதை விளக்குகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வர்தன்.
ஏற்கனவே வீட்டுக் கடன் வைத்திருப்பவர்கள்…
> பெரும்பாலான வீட்டுக் கடன்கள் ரெப்போ வட்டி விகிதத்தோடு இணைக்கப்பட்டு தான் இருக்கும். அதனால், உங்கள் வங்கிக்கு போன் செய்து உங்கள் கடன் இந்த வகையில் இருக்கிறதா என்பதை செக் செய்துகொள்ளுங்கள்.
> ஒருவேளை, அப்படி எதுவும் இல்லையென்றால், உங்கள் வங்கியிடம் உங்களது இ.எம்.ஐ தொகையைக் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துங்கள். 750-க்கு மேல் உங்களிடம் கிரெடிட் ஸ்கோர் இருந்தால், இந்தப் பேச்சுவார்த்தை பெரும்பாலும் சக்சஸ் தான்.
> இ.எம்.ஐ குறையவில்லை… வங்கியும் குறைக்கவில்லை என்றால் குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்டுள்ள வங்கிக்கு உங்களது கடனை ரீ-பைனான்ஸ் செய்யலாம்.
புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களே…
> ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் 7.9 சதவிகித வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அதனால், இரண்டு, மூன்று வங்கிகளில் விசாரித்து, அதன் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு எங்கே கடன் வாங்கப் போகிறீர்கள் என்பதை தேர்வு செய்யுங்கள்.

குறிப்புகள்:
> வட்டி விகிதக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிடாது. அதனால், அது எப்போது வருகிறது என்பதை சரியாகத் தெரிந்துகொண்டு நீங்கள் அடுத்தகட்ட நகர்வுகளை செய்யலாம்.
> ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு, இ.எம்.ஐ குறையும்போது, காசு கொஞ்சம் கையில் சேரும். அந்தப் பணத்தை செலவு செய்யாமல், முதலீடு செய்தால் சூப்பர்.
> வீட்டுக் கடன் வட்டி விகிதக் குறைவு என்பது ரியல் எஸ்டேட்டிற்கு அற்புதமான காலக்கட்டம். அதனால், நிலம், வீடு என எது வாங்கப்போனாலும் விலையை நன்கு விசாரித்து, பேரம் பேசி லாபம் அடையலாம்.