
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அன்புள்ள அப்பா,
எனக்கு பதினான்கு வயதே ஆகும்போது, இறைவனடி சேர உங்களுக்கு என்ன அவசரம்? நீங்கள் சென்று முப்பது வருடங்கள் ஆகிவிட்டாலும், உங்களை நினைக்கும் சில வேளைகளில் பதினான்கு வயது சிறுமியாகவே மாறி அழுகிறேன்.
உங்களுடன் இருந்த சொற்ப வருடங்களில் “daddy’s little princess” -ஆகவே இருந்திருக்கிறேன் என்பதில் பெருமை எனக்கு. உங்களுடைய பிறந்த நாள், இறந்த நாள் இவற்றை உங்களை மனதில் நினைத்துக் கொண்டே கடக்கிறேன். இந்த நடுத்தர வயதில் யாரிடம் நான் போய் சொல்ல, உங்களை இப்போதும் எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்று?
குடும்பத்தோடு திருப்பதி சென்று திரும்பிய அடுத்த நாளில் நீங்கள் இறந்தீர்கள். அதன் பிறகு ஆறேழு வருடங்கள் கழித்து மறுபடி திருப்பதி சென்றபோது, பேருந்தில் மலை ஏறும் முழு நேரமும் அழுதேன், குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல்.
எனக்குத் திருமணமாகி சில மாதங்களில், ஒருமுறை நானும், எனது மாமனாரும் மட்டும் ஒருமணி நேரப் பேருந்து பயணத்தில், ஒரு விசேஷத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம். மற்ற வீட்டுறுப்பினர்கள் ஏற்கனவே அங்குச் சென்று விட்டிருந்தார்கள். பேருந்தில், கிட்டத்தட்ட உங்களின் வயதையொத்த… ஒரு அப்பா போன்றே vibe -ஐக் கொடுக்கும் என் மாமனார் அருகில் அமர்ந்து பயணித்தது, நான் என் அப்பாவை எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்று உணர வைத்தது. பயணம் தோறும் அழுதுக் கோண்டே பயணித்தேன், என் மாமனார் அறியாமல்.
ஓரிரு வருடங்கள் முன்பு, உங்களின் டைரியிலிருந்து ஒரு பக்கத்தைப் புகைப்படமெடுத்துப் பகிர்ந்திருந்தார் அண்ணன். இறப்பதற்கு மூன்று வருடங்கள் முன்பு, அம்மாவும் நீங்களும் மட்டும் சிலபல கோவில்களுக்குத் தீர்த்த யாத்திரை சென்று வந்தீர்களே… அந்த 15 நாட்களையும், நீங்கள் எழுதி வைத்திருந்திருக்கிறீர்கள். அதை படித்தபோது தொண்டை அடைத்து அழுதேன், வீட்டில் யாருமில்லை அப்போது.
இப்படி என் மன ஓட்டங்களைப் பிறரிடம் சொல்லாமல், மனதினுள்ளேயே வைத்து அழுவது என்பது, நீங்கள் சென்றபோது ஆரம்பித்ததுதான். இன்றுவரை அப்படிதான் இருக்கிறேன்.

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்போதுதான் இறந்தீர்கள். எவ்வருடமும் இல்லாத திருவருடமாக, அந்த தீபாவளிக்கு மூன்று மாதம் முன்னமே எனக்குப் புதுத்துணி வாங்கி கொடுத்தீர்கள். பட்டு இல்லையென்றாலும், சாதாரண தங்க சரிகை பார்டர் போட்ட பளபள பாவாடைகளில் நான் அடம் பிடித்து வாங்கியது ‘கருப்பு நிறத்தில் அரக்கு நிற பார்டர்’ போட்ட பாவாடைத் துணி.
அம்மாவிற்கு பண்டிகையென்று வாங்குவது கருப்பாக இருப்பதில் சிறிதும் விருப்பமில்லை. ஆனால் அப்பா, உங்களுக்குத்தான் நான் “தங்கமீன்” ஆயிற்றே! அதையே வாங்கிக் கொடுத்து விட்டீர்கள். கருப்பு வாங்கியதால்தான், நீங்கள் போய் விட்டீர்கள் என்று ஆழமாக நம்பி எவ்வளவு அழுதேன் தெரியுமா? இன்னமும் கருப்பு என்றால் வாங்குவதில்லைதான்.
நீங்கள் சென்று 15 வருடங்கள் கழித்து, எனக்குக் குழந்தை பிறக்க அக்டோபர் மாதத்தில் ஒரு தேதியைக் குறித்தார் மருத்துவர். உங்களின் பிறந்த, இறந்த மற்றும் உங்களின் ஸ்ரார்த்த / திவச தினம் என்று மூன்றும் அந்த மாதத்தில்தான் வரும். மூன்று தேதிகளில் ஏதாவது ஒன்றில் எனக்குக் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று மனதார நினைத்தேன்.
அதேபோல உங்களின் திவச தினத்தில், உங்களுடைய பிரசாதத்தை ஒரு வாய் சாப்பிட்ட பிறகு, சுகப் பிரசவத்திற்கான அனைத்தும் வேகமாகத் தொடங்கி, அந்த நாள் முடியும் முன் மகள் பிறந்தாள். நீங்களே மகளாகப் பிறந்ததைப் போல மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.

உங்களுக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அதாவது எழுதும் திறமை இருந்திருக்கிறது. அதுதான் உங்களது குழந்தைகள் எங்களுக்கும் சிறிது வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. புகைப்படத்தில் இருக்கும் உங்களைப் பார்த்து சிலபேர், நான் உங்களைப் போல இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.
உறவினர்களோ அண்ணன் அப்படியே உங்களைப் போலவே இருப்பதாகச் சொல்கிறார்கள். என் மகளும் உங்களைப் போலவே, தமிழில் இரட்டைக் கொம்பு எழுத்தைக் கீழிருந்து மேலாக எழுதுகிறாள். ஒருமுறை சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது தனியாக ஏதோ பேசியிருப்பேன் போல. இது அடிக்கடி நடக்கும் சமாச்சாரம் தான். (ஹிஹி!). அம்மா அதைப் பார்த்து “என்னடி அப்பாவைப் போலவே நீயும் தனியா பேசிக்குற?” என்றார்.
“அப்படியா?!” என்றிருந்தது எனக்கு. இப்படி எங்கள் வாழ்க்கையிலிருந்து முழுதாக போய் விடாமல், எங்களுடன் இருந்துகொண்டுதான் இருக்கிறீர்கள்.
உங்கள் பேத்தி, அவளுக்கு மூன்று வயதிருக்கும்போது, உங்கள் புகைப் படத்தைப் பார்த்து, “தாத்தா, ஏன் உன் பொண்ண விட்டுட்டு போயிட்டே. உன் பொண்ணு பாவமில்லையா, உன்கூட கூட்டிட்டு போ!” என்றாளே பார்க்கவேண்டும். சிரித்துச் சிரித்து வயிறு வலித்து விட்டது அன்று.

உறவினர்கள் நாங்கள் கூடினால், உங்களைப் பற்றி அவர்கள் பல நிகழ்வுகளைச் சொல்கையில், அவர்கள் உங்களுடன் செலவழித்த காலங்கள் என்னுடைய அனுபவத்தைவிட நிறைய என்பதை உணர்ந்து, அவர்கள் மீது பொறாமை ஏற்படும் எனக்கு. ஆனால் “அப்படியா!” என்று ஆவலாகவும், மகிழ்ச்சியாகவும் கேட்டுக்கொண்டிருப்பேன்.
பெண்கள் தன் தந்தையைப் போலவே கணவர் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள் என்று பொதுவாக எல்லோரும் சொல்வார்கள். அது உண்மைதான். உங்களின் சாயலை / mannerisms சிலவற்றை, என்னைப் பெண் பார்க்க வந்த முதல் நாளே, என் வருங்கால கணவரான அவரிடத்தில் கண்டேன். கை கட்டி, தலை சாய்த்துத் தாழ்ந்த குரலில் பேசும் பாணி முதலியவை உங்களை நினைவு படுத்தியது.
புரந்தர தாசர் பாடல்கள் புத்தகத்தில், நீங்கள் சில பாடங்களில் செய்த திருத்தங்கள், நீங்கள் எழுதிய டைரி, சில குறிப்புகள் எழுதிய டைரி, உங்களுடைய பெயர் எழுதிய உங்கள் அலுவலக ஐடி, உங்களுடைய பல சந்தர்ப்பங்களில் பிடித்த நான்கு அல்லது ஐந்து புகைப்படங்கள் – இவ்வளவுதான் உங்கள் நினைவாக எங்களிடம் உள்ளது. நீங்களும் நானும் சேர்ந்து இருப்பது போல் ஒரே ஒரு புகைப்புடம் தான் இருந்தது. அதுவும் வெள்ளை பூத்து அழிந்துவிட்டது என்பது கொடுமை. நம் கடைசி திருப்பதி பயணத்தின்போது நீங்கள் எனக்கு வாங்கி கொடுத்த வளையல் ஸ்டாண்ட் -ஐ தான் நான் இன்னமும் பயன் படுத்துகிறேன்.

நீங்களும் நானும் மட்டும், அத்தை வீட்டிற்குப் பயணித்த திருச்சி நாட்கள், வார இறுதிகளில் உங்கள் அலுவலகத்திற்கு என்னை அழைத்துச் சென்றது, நான் ஆறாவது படிக்கும்போது சென்னையில் பார்க்கவேண்டிய இடங்கள் என்று என் பாடப் புத்தகத்தில் வந்த சிலவற்றை என்னை அழைத்துப் போய் காட்டியது, திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அப்போது மிகப் பிரபலமான மசாலா பால் -ஐ பல இரவுகள் எனக்கு வாங்கி கொடுத்தது, இப்படி நாம் இருவர் மட்டுமே கழித்த பொழுதுகள் எல்லாம் பசுமையாக என் நினைவில் இன்றும் இருக்கிறது.
நீங்கள் போகப் போவதற்கு முதல் நாள் இரவு, நான், நீங்கள், அம்மா சேர்ந்து படுத்தோம். உங்களுக்கு என்ன தோன்றியதோ அல்லது உடம்பிற்கு என்ன படுத்தியதோ தெரியவில்லை, படுத்துக்கொண்டிருக்கும்போது எனக்கு நிறைய அட்வைஸ் செய்தீர்கள். “நல்லா படிக்கணும், அண்ணன்களுடன் சண்டை போடக் கூடாது, அம்மாகிட்ட எதையும் மறைக்கக் கூடாது, (நான் அப்போதுதான் பத்திரிக்கைகளை வாசிக்காத தொடங்கியிருந்தேன், அடுத்து நாவல்களுக்குத்தான் போவேன் என்று உணர்ந்து) நல்ல நாவல்களைத்தான் படிக்கணும்” என்று நிறையச் சொன்னீர்கள். இன்னும் சில மணி நேரங்களில் உங்களை இழக்கப் போகிறேன் என்றெறியாத நான் “ம்ம்ம்” கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
இந்த கடிதத்தின் தொடக்கத்தில் எழுதியதைத்தான் இப்போதும் கேட்கிறேன், “என்ன அவசரம் உங்களுக்கு, அவ்வளவு சீக்கிரத்தில் என்னை விட்டுச் செல்ல?”
இப்படிக்கு
உங்கள் செல்ல மகள்
சுதா சத்தியநாராயணா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.