
மும்பைக்கு வயிற்றில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. வயிற்றில் போதைப்பொருளை எடுத்து வரும்போது அது தொடர்பாக முன்கூட்டியே விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட நபர் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார். அவ்வாறு தகவல் கிடைக்கவில்லையெனில் போதைப்பொருள் மும்பைக்குள் கடத்தி வரப்பட்டுவிடுகிறது. தற்போது நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் 1.2 கிலோ எடையுள்ள கொகைன் போதை மாத்திரைகளை வாய்வழியாக விழுங்கி மும்பைக்கு எடுத்து வந்தது, விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த அனி சார்லஸ் என்பவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக விமான நிலைய வருவாய் புலனாய்வுத்துறைக்கு முன்கூட்டியே ரகசிய தகவல் கிடைத்தது.
அனி சார்லஸ் வந்தபோது அவரது உடமைகள் மற்றும் அவரது உடலை சோதித்து பார்த்தபோது அவரிடம் எந்த விதமான போதைப்பொருளும் இல்லை. ஆனால் போதைப்பொருள் தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்து இருப்பதால் அந்த நபரை ஜெ.ஜெ மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவை வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.10 கோடியாகும். மொத்தம் 67 மாத்திரைகள் வயிற்றில் இருந்தது. இதே போன்று தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு பேர் ஹைட்ரோபோனிக் முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சாவை கடத்தி வந்தனர். அக்பர் அன்சாரி, இப்ராகிம் அன்சாரி ஆகிய அந்த இரண்டு பயணிகள் கொண்டு வந்த பேக்கை முழுமையாக சோதித்து பார்த்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றின் மதிப்பு 12 கோடியாகும். மும்பையில் அவற்றை டெலிவரி செய்ய எடுத்து வந்திருந்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. போதைப்பொருளை கடத்தி வருபவர்கள் பெரும்பாலும் மாணவர் விசாவில் வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு போதைப்பொருளை எடுத்து வரக்கூடியவர்களை கடத்தல்காரர்கள் மிகவும் நேர்த்தியான முறையில் தேர்வு செய்கின்றனர். போதைப்பொருளை எடுத்து வருபவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், ஒல்லியாகவும் இருக்கக்கூடியவர்களை கடத்தல்காரர்கள் அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். ஆரோக்கியமாக இருப்பவர்களால்தான் அதிக அளவில் போதைப்பொருள் மாத்திரைகளை வயிற்றில் சுமந்து வர முடியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் மதன் கூறுகையில், ”போதைப்பொருளை எடுத்து வருபவர்கள் பெரும்பாலும் மாணவர் விசாவில்தான் வருகின்றனர். அதற்கான ஆதாரம் கிடைத்து இருக்கிறது. போதைப்பொருளை எடுத்து வருபவர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும்போது 20 மணி நேரம் வரை பயணம் செய்கின்றனர். இப்பயணத்தின் போது வயிற்றில் இருக்கும் போதைப்பொருள் மாத்திரைகள் வெடிக்காமல் இருக்க அவர்கள் எதுவும் சாப்பிடவோ அல்லது தண்ணீர் போன்ற நீர் உணவுகளை எடுத்துக்கொள்வதோ கிடையாது. அவர்கள் மும்பை வந்தவுடன் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து அனைத்து மாத்திரைகளையும் வயிற்றில் இருந்து வெளியில் எடுத்து அதனை டெலிவரி செய்யவேண்டிய நபர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
பல வழிகளில் அவற்றை நாடு முழுவதும் அனுப்பி விடுகின்றனர். மீரா ரோட்டில் ரூ 22 கோடி மதிப்பு கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கிங்ஸ்லி என்பவரிடம் நடத்திய விசாரணையில்தான் அவர்கள் எப்படி வெளிநாட்டில் இருந்து போதைப்பொருளை இந்தியாவிற்கு கடத்தி வருகின்றனர் என்ற விபரம் தெரிய வந்தது. இப்போது எத்தனை பேர் மும்பைக்கு போதைப்பொருளை எடுத்து வரும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார். போதைப்பொருள்களில் கொகைன் அதிக விலையுள்ளது. அவற்றை ஆப்பிரிக்க பிரஜைகள் வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு கடத்தி வந்து நாடு முழுவதும் சப்ளை செய்கின்றனர்.