
சென்னை அண்ணா சாலை, நந்தனம் தேவர் சிலை சந்திப்பில் அமைந்துள்ளது நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம்.
சென்னையின் மிகவும் பரபரப்பான சந்திப்பு சாலைகளில் இந்த சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான பகுதி .
தற்போது அண்ணா சாலையில் நான்கடுக்கு மேம்பாலம் காட்டும் பணி நடைபெற்று வருவதால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை தற்போது ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டு மூப்பனார் பாலத்தில் இருந்து நந்தனம் நோக்கி செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நந்தனம் மெட்ரோ நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் தற்போது தற்காலிக பேருந்து நிறுத்தம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
பரபரப்பான நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தை பல்வேறு மக்களும் பயன்படுத்தி வருவதால் எப்போதும் இந்த சந்திப்பில் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சாலையிலிருந்து, சைதாப்பேட்டை நோக்கி, அண்ணா சாலைக்கு திரும்பும் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் பிரதான வழி உள்ளது.
இந்த நுழைவு வாயில் அருகே நடைபாதையை ஒட்டி அமைந்துள்ள ஒரு கம்பத்தில் ஏராளமான வயர்கள் கட்டு கட்டாக கட்டி வைக்கப்பட்டுள்ளது அதில் பெரிய கேபிள் ஒன்று தரையைத் தொடும் அளவுக்கு கீழே கையெட்டும் வட்ட வடிவில் கடந்த சில நாள்களாக தொங்கிக்கொண்டு இருக்கிறது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் பைக் டாக்ஸி , ஆட்டோக்கள் மூலம் இந்த மெட்ரோ நிலையத்தை வந்தடையும் பயணிகள் அவசர அவசரமாக இறங்கி உள்ளே செல்லும்போது, தொங்கிக்கொண்டிருக்கும் இந்த அபாயகரமான கேபிளில் கழுத்தில் உரசிக் கொண்டும் கையில் மாட்டி தட்டு தடுமாறியும் பயணிகள் செல்வதை நாம் வெவ்வேறு தருணங்களில் கவனித்தோம். அருகிலேயே அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் அருகருகே இருப்பதாலும் இந்த நடைபாதையை ஏராளமான பொதுமக்களும் பயணிகளும் கடந்து செல்கிறார்கள்.

குறிப்பாக மெட்ரோ நிலையத்திற்கு நுழைவு வாயிலின் மிக அருகில் இந்த கேபிள்கள் தொங்கிக்கொண்டு இருப்பதால் சிரமத்திற்கு இடையே கடந்து செல்கிறார்கள்.
தரையை தொடும் அளவிற்கு தொங்கிக்கொண்டிருக்கும் இந்த கேபிளை உடனடியாக மேலே இழுத்து கட்டி சரி செய்து மக்கள் எளிதாக கடக்கும் வகையில் செய்தால் நன்றாக இருக்கும் என்று அங்கு கடந்து செல்பவர்கள் கூறுகிறார்கள், சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?