• June 23, 2025
  • NewsEditor
  • 0

பணியிடத்தில் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையை எதிர்கொண்டதாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இன்டிகோ விமானி ஒருவர் 3 உயர் அதிகாரிகள் மீது புகார் அளித்துள்ளார்.

35 வயதாகும் அந்த விமானியை, “நீ வானில் பறக்கத் தகுதியற்றவன்” என்றும் “மீண்டும் செருப்பு தைக்கச் சென்றுவிடு” என்று புகாரில் தெரிவித்திருக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில் இன்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த தபஸ் டே, மனிஷ் சாஹ்னி மற்றும் கேப்டன் ராகுல் பாட்டீல் ஆகிய மூன்று அதிகாரிகள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Equality

இளைஞருக்கு நடந்தது என்ன?

குருகிராமில் உள்ள இண்டிகோ நிறுவனத்தின் தலைமையகத்தில் 30 நிமிட மீட்டிங் ஒன்று நடைபெற்றுள்ளது. அங்கு உயரதிகாரிகள் பாதிக்கப்பட்ட இளைஞரை நோக்கி, “நீ விமானம் ஓட்டத் தகுதியற்றவன், மீண்டும் செருப்பு தைக்கச் சென்றுவிடு. இங்கே காவலாளியாக இருப்பதற்குக்கூட உனக்குத் தகுதியில்லை.” எனக் கூறியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிற்சி விமானியாக பணி செய்யும் தன்னை ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தும் நோக்கத்துடனேயே இத்தகைய துன்புறுத்தல்கள் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார். அத்துடன் அவரது சாதி அடையாளத்தை நோக்கி இழிவான சொற்களைப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்மீது தொழில்முறை பழிவாங்கல் நடவடிக்கைகள் நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். நியாயமற்ற சம்பளக் குறைப்புக்கள், கட்டாய மறுபயிற்சி அமர்வுகள் மற்றும் தேவையற்ற எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

discrimination
discrimination

இந்த விஷயத்தை உயர் அதிகாரிகள் மற்றும் இண்டிகோவின் நெறிமுறைகள் குழுவிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், காவல்துறையில் புகார் அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு – IndiGo மறுப்பு

பாதிக்கப்பட்ட விமானி முதலில் பெங்களூரில் உள்ள காவல்நிலையத்தை அணுகியுள்ளார். அங்கு அவரது புகாரின் அடிப்படையில் ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. தற்போது இன்டிகோ தலைமையகம் அமைந்துள்ள குருகிராம் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த புகார் பற்றி இன்டிகோ செய்தித் தொடர்பாளர், “இன்டிகோ நிறுவனம் எந்தவொரு பாகுபாடு, துன்புறுத்துதல் மற்றும் சார்புதன்மையையும் துளியும் சகித்துக்கொள்ளாத கொள்கையைக் கொண்டிருக்கிறது. அத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய, மரியாதையளிக்கும் பணியிடமாக இருப்பதில் உறுதியாக உள்ளது.

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை இன்டிகோ கடுமையாக மறுக்கிறது. நியாயம், நேர்மை மற்றும் பொறுப்பேற்றல் போன்ற நிறுவனத்தின் மதிப்புகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறது. தேவைக்கு ஏற்ப காவல்துறை மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு எங்கள் ஒத்துழைப்பை வழங்குவோம்” எனக் கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *