• June 23, 2025
  • NewsEditor
  • 0

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நேற்று `முருக பக்தர்கள் மாநாடு’ நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முருக பக்தர்கள் மாநாடு

மேலும், இந்த மாநாட்டில் பேசிய பவன் கல்யாண், “முருகனின் அவதாரம் முத்துராமலிங்க தேவர். உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்.

கருப்பு நிறத்தை வைத்து அரசியல் செய்யும் கூட்டம் முருகரை கந்தசஷ்டி கவசத்தைக் கிண்டல் செய்தனர்.

இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து போராடினால் வெற்றி பெறலாம்.” என அரசியல் பேசினார்.

மேலும், இந்த மாநாட்டில் வீடியோ ஒன்று ஒளிபரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தி.மு.க-வின் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அதிமுகவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் ஆர்.எஸ். பாரதி, “மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள் ’அண்ணா’ பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர்.

அண்ணாவைக் கேவலப்படுத்துவதை ’அண்ணா’ என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அ.தி.மு.க ரத்தமா? பா.ஜ.க பாசமா?

அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

உங்கள் தாயை, உங்கள் மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா?

இன்றைக்கு எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

அ.தி.மு.க-வில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு மட்டும் நீங்கள் வந்து விடாதீர்கள்.

அ.தி.மு.க-வின் கொடியின் நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா? அந்த அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா?

’மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு’ எனச் சொன்னார் பெரியார். அந்த மானத்தை இழந்து, வீரத்தைத் துறந்து, அடிமையாக வளைந்து, குனிந்து, ஒடிந்தே விட்டது அ.தி.மு.க!

1956-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெறாத ஒரு சம்பவத்தைச் சொல்லி அண்ணாவை விமர்சித்தார் தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை.

அதற்கு எதிர்வினை ஆற்றிய அ.தி.மு.க இன்றைக்கு எங்கே ஓடி ஒளிந்து கொண்டது?

ADMK - BJP - எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா
ADMK – BJP – எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா

நேற்று முருகன் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டால், இன்றைக்குக் கோவையில் RSS நூற்றாண்டு விழாவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்கிறார்.

அடுத்து நாக்பூரில் எடப்பாடி பழனிசாமி தஞ்சம் அடைவாரா?

“திராவிடம் பற்றி அறிஞர்களிடத்தில்தான் கேட்க வேண்டும்” என்று முன்பு சொன்னவர்தானே பழனிச்சாமி. அவர் இன்றைக்கு இந்துத்துவத்தில் முழுமையாகக் கரைந்துவிட்டார்.

எம்.ஜி.ஆர் எதிர்த்த இந்து முன்னணியை இன்றைய அ.தி.மு.க சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறது.

1982-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடைபெற்ற மண்டைக்காடு கலவரம் பற்றியும், இந்து முன்னணி குறித்தும் எம்.ஜி.ஆர் 29.3.1982 அன்று சட்டப்பேரவையிலேயே தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

“இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்’’ என்று அன்றைக்குச் சொன்னவர் எம்.ஜி.ஆர்.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, ’சூரனை வதம் செய்த முருகா! திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா!’ என்றும் ’திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா முருக பக்தர்களே’ என்றும் இந்து முன்னணியினர் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி - அதிமுக
எடப்பாடி பழனிசாமி – அதிமுக

திராவிடத்தை அழிக்கும் முருகன் மாநாட்டிற்கு ’திராவிட’ என்ற பெயர் தாங்கிய அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமி வாழ்த்து தெரிவிக்கிறார்.

முருகன் மாநாடு முழுவதும் வெறுப்புப் பேச்சுக்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. வெறுப்பு பேச்சுகளை எல்லாம் அதிமுக ஏற்றுக் கொள்கிறது போல!

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கிற அண்ணாவின் கூற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இந்துத்துவத்தில் முற்றிலுமாக அ.தி.மு.க கரைந்துவிட்டது.

பா.ஜ.க-வின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் இந்தத் துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *