
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது. மத்திய கிழக்கில் உடனடி, நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு முன்மொழிந்தது. அதன் அடிப்படையில், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று கூடியது.
அப்போது சீனாவின் ஐ.நா தூதர் ஃபூ காங், “இராணுவத் தாக்குதலை கட்டுப்படுத்தி, மோதல்களை அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும். எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும். இது இப்படியே தொடர்ந்தால், மேலும் நிலைமை கட்டுப்பாட்டை மீறக்கூடும். குறிப்பாக போரின் பரவலைத் தவிர்க்க இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும். ஈரான் மீதான தாக்குதல் மூலம் ஒரு நாடாகவும், சர்வதேச பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பாளராகவும் அமெரிக்கா தன்மீது இருந்த நம்பகத்தன்மையும் இழந்துவிட்டது. ஈரானிலிருந்து சீன குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.” என்றார்.