• June 23, 2025
  • NewsEditor
  • 0

கேரள ராஜ்பவனில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காவிக்கொடி ஏந்தி காட்சியளிக்கும் பாரதமாதா படத்துக்கு மலர் தூவி வணங்கிய பின்னர் தொடங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.

ஆப்பரேசன் சிந்தூர் குறித்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் குருமூர்த்தியை அழைத்து ராஜ்பவனில் பேசவைத்தனர். அந்த நிகழ்ச்சியில் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதமாதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அடுத்ததாக உலக சுற்றுச்சூழல் தினவிழாவை முன்னிட்டு கடந்த 5-ம் தேதி ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சி மேடையில் பாரதமாதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணிதார் மாநில அமைச்சர் பி.பிரசாந்த். அடுத்ததாக ஸ்கவுட் அண்ட் கெய்ட்ஸ் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ராஜ்பவனில் நடந்தது.

கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

அந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கலந்துகொண்டர். அப்போதும் மேடையில் பாரதமாதா படம் இருந்ததை பார்த்த அமைச்சர் சிவன்குட்டி மேடையில் பேசிமுடித்துவிட்டு, பாரதமாதா படம் இருப்பதால் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாகக்கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

அமைச்சர் சிவன்குட்டியின் செயல்பாட்டு சரியானது என சி.பி.எம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் மற்றும் சி.பி.ஐ மாநில செயலாளர் பினோய் விஸ்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். பாரதமாதா படம் குறித்த விவகாரத்தில் கேரளாவில் ஆளும் சி.பி.எம், எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் பா.ஜ.க கவர்னருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ராஜ்பவன் முன்பு சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சிவன்குட்டிக்கு கறுப்புகொடி காட்ட முயன்றனர் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி நிர்வாகிகள்.

அப்போது எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் சாலையில் இறங்கி ஏ.பி.வி.பி அமைப்பினரை தடுத்ததால் மாறி மாறி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நேற்று மாலை திருமலை பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சிவன்குட்டிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியது ஏ.பி.வி.பி. மேலும், கடந்த சனிக்கிழமை இரவு ஏ.பி.வி.பி மாநில செயலாளரை திருவனந்தபுரம் தம்பானூரில் வைத்து சிலர் தாக்கியதை கண்டித்து இன்று கேரளாவில் கல்வி நிறுவனங்கள் அளவிலான பந்த்-க்கு ஏ.பி.வி.பி அழைப்புவிடுத்துள்ளது. கறுப்புகொடி காட்டும் சம்பவங்களைத் தொடர்ந்து அமைச்சர் சிவன்குட்டிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் போராட்டம்

இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள மாநில பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் கே.சுரேந்திரன், “கொள்ளிக்கட்டையை வைத்து தலை சொறியக்கூடாது. அமைச்சர் சிவன்குட்டி பழைய சி.ஐ.டி.யு குண்டர் அல்ல, கல்வித்துறை அமைச்சர் என்பதைஉணர்ந்து செயல்பட வேண்டும்” என விமர்சித்தார்.

பா.ஜ.க மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தும் நிர்வாகிகளை அடித்து ஒடுக்குவதுதான் உங்கள் நோக்கம் எனில், அதே ரீதியில் திருப்பி அடிக்கும் சக்தி அமைப்புக்கு உண்டு என்பதை சி.பி.எம் உணர வேண்டும்” என்றார்.

அமைச்சர் சிவன்குட்டி

பாரதமாதா படம் குறித்த விவாதத்தில் மாணவர் அமைப்பினர் மோதிக்கொள்வது பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் மாநில தலைவர் சன்னி ஜோசப், “தேசியக்கொடி மக்களின் இதயத்தில் கலந்துள்ளது. அதில் உள்ள மூவர்ணம் நாட்டின் நிறமாகும். அதை யாராலும் மாற்ற முடியாது. முன்னாள் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி செயல்பட்டபோது, அவரை பாதுகாக்கும் விதமாக நடவடிக்கைகளை முதல்வர் உள்ளிட்டவர்கள் செய்தனர். இப்போது தெருவில் நடப்பது நாடகமாகக்கூடாது. அரசியலமைப்பின் ஸ்தாபனமான ராஜ்பவனை அரசியல் மயமாக்கக்கூடாது” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *