
ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், வேறு சமூக ஆணை திருமணம் செய்துகொண்டதால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 40 ஆண்கள் மொட்டையடித்து தீட்டு கழித்திருக்கின்றனர். இது தொடர்பாக வெளியான வீடியோவில், ஆண்கள் கூட்டம் மொட்டையடித்து அமர்ந்திருக்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வெளியான செய்தியில், ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில், ‘குடும்ப்’ இனத்தைச் சேர்ந்த பழங்குடி சமூகப் பெண் ஒருவர், பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்திருக்கிறார். இந்த விவகாரம் கிராமத்தில் ஊர் தலைவர் முன் விசாரணைக்கு வந்திருக்கிறது.
அப்போது இதுபோன்ற செயலால் குற்றம் நடந்துவிட்டதாகவும், அந்தப் பெண்ணின் குடும்பத்தின் ஆண்கள் மொட்டையடித்து குலதெய்வத்துக்கு ஆடு, கோழி, பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளை பலி கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்தான் இந்த மொட்டையடிக்கும் சடங்கு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ராயகடா பழங்குடி சமூகம் பாரம்பரியமாக வெவ்வேறு சமூகங்களுக்கு இடையிலான திருமணங்களைத் தடை செய்கிறது. பாரம்பரிய நடைமுறைகளை கடைபிடிக்கத் தவறினால், அந்தக் குடும்பம் சமூக விலக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் 40 பேரும் ‘எங்கள் விருப்பபடிதான் மொட்டையடித்துக்கொண்டோம்’ எனத் தெரிவித்திருக்கின்றனர்.