
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 20) தொடங்கியது.
முதல் நாள் முடிவில் ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தால் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது.
கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் நின்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் தொடங்கியது.
பண்ட்டின் சாதனை சதம்!
இரண்டாவது நாள் ஆட்டத்தை கில்லும், பண்ட்டும் தொடங்கிய விதம் இந்திய அணி எளிதாக 500 ரங்களைக் கடக்கும் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. ஆனால், நடந்ததே வேறு.
145 பந்துகளில் 99 ரன்களுடன் கிரீஸில் நின்று கொண்டிருந்த பண்ட் சிக்ஸ் அடித்து டெஸ்டில் 7-வது சதம் போட்டார்.
இந்தச் சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் தோனியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார் பண்ட்.
இதுவரை இந்திய அணிக்கு எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது.
41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை அள்ளிய இங்கிலாந்து பவுலர்கள்!
இந்த நேரத்தில்தான், சோயப் பஷீரின் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று 147 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரைத்தொடர்ந்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய கருண் நாயரை 0 ரன்னில் வெளியேற்றினார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.
விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும் மறுபுறம் பண்ட் பவுண்டரிகளாக அடித்துக்கொண்டிருக்க, 134 அவரையும் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கினார் ஜோஷ் டங். ரிவ்யூ எடுத்தும் இந்தப் பலனும் இல்லை.
தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே வெளியே சென்ற பந்தை வம்படியாக அடிக்க முயன்று எட்ஜ் ஆகி 1 ரன்னில் வெளியேறினார் ஷர்துல் தாகூர்.

அடுத்து வந்த பும்ராவை 0 ரன்னில் வெளியேற்றிய ஜோஷ் டங், தான் வீசிய அடுத்த ஓவரிலேயே ஜடேஜாவையும், பிரசித் கிருஷ்ணாவையும் அவுட்டாக்கி இந்தியாவை 471 ரன்களுக்கு ஆல்அவுட்டாக்கினார்.
கில் அவுட்டாக்குவதற்கு முன்பு வரை 430 ரன்களுக்கு 3 விக்கெட் என்றிருந்த இந்தியா, அடுத்த 41 ரன்களில் மோசமாக ஆடி மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸும், ஜோஷ் டங்கும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் ஓவரிலேயே அசத்திய பும்ரா… ஆனாலும் அசராத இங்கிலாந்து!
டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபகாலமாகவே அதிரடி பாணியைக் கையிலெடுத்து ஆடிவரும் இங்கிலாந்து அணியில், பென் டக்கெட்டும், ஸாக் க்ராவ்லியும் ஓப்பனிங் இறங்கினர்.
அவர்களுக்கு, உலகின் நம்பர் டெஸ்ட் பவுலர் பும்ரா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே ஸாக் க்ராவ்லியை 4 ரன்களில் அவுட்டாக்கி இங்கிலாந்துக்கு லிட்டில் ஷாக் கொடுத்தார் பும்ரா.
ஆனாலும், அதில் அதிர்ச்சியாக பென் டக்கெட்டும் போப்பும், இந்திய பவுலர்களை ஒருநாள் போட்டி போலக் கையாண்டனர்.

இதில், பெரும்பாலும் கேட்சைத் தவறவிடாத ஜடேஜா, பும்ரா வீசிய ஓவரில் பென் டக்கெட்டின் கேட்சைத் தவறவிட்டார்.
அதைத்தொடர்ந்து, பென் டக்கெட்டும், போப்பும் பவுண்டரிகளாக அடிக்க 22-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது இங்கிலாந்து.
அதே ஓவரில் பென் டக்கெட் அரைசதம் அடிக்க, அவரைத் தொடர்ந்து போப்பும் அரைசதம் அடித்தார்.
25 ஓவர்களுக்கும் மேலாக விக்கெட் விடாமல் இந்திய பவுலர்களின் பொறுமையைச் சோதித்துக்கொண்டிருந்த இந்த கூட்டணியை, 29-வது ஓவரில் பென் டக்கெட்டின் விக்கெட் மூலம் உடைத்தார் பும்ரா.
அடுத்த சில ஓவர்களிலேயே அதே பும்ரா ஓவரில் ஜோ ரூட்டின் சற்று கடினமான கேட்சை ஸ்லிப்பில் நின்ற ஜெய்ஸ்வால் தவறவிட்டார். இருப்பினும், ரூட்டை பும்ராவே 28 ரன்களில் அவுட்டாக்கினார். ஆனாலும், நிதானமாக ஆடிய போப் 125 பந்துகளில் சத்தமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.