
ஈரானின் அணு ஆயுதத் தளங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அதே நேரம் இஸ்ரேல் ட்ரம்பைப் பாராட்டியிருக்கிறது.
தங்க எழுத்துக்களால்…
`ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டின் பச்சைக் கொடியையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களால் தனித்துத் தாக்குவதற்கான ஆற்றல் இருக்கிறது’ என நெதன்யாகு பேட்டியளித்த அடுத்த நாள், ஈரான் மீது ட்ரம்ப் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இதை வரவேற்ற இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், “ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் வரலாற்றுப் புத்தகங்களில் தனது பெயரைத் தங்க எழுத்துக்களில் பதித்துவிட்டார். ஈரானுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கிய பிரதமர் நெதன்யாகுவின் அசாதாரண தலைமைக்கும் பாராட்டுக்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சேதாரம் இல்லை
இந்தத் தாக்குதலால் எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் அணுசக்தி தளங்கள் மீதான சட்டவிரோத அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து, கள ஆய்வுகள் மற்றும் கதிர்வீச்சு அமைப்பு தரவுகள் எந்த மாசுபாடும், ஆபத்தும் பதிவு செய்யப்படவில்லை.
இந்தத் தளங்களைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. பாதுகாப்பு சீரான நிலையில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
ஃபோர்டோவ் அமைந்துள்ள கோம் பகுதி பிரதிநிதி மனன் ரைசி, “துல்லியமான தகவல்களின் அடிப்படையில், பொய் சொல்லும் அமெரிக்க அதிபரின் கூற்றுகளுக்கு மாறாக, ஃபோர்டோ அணுசக்தி நிலையம் பெரிய அளவில் சேதமடையவில்லை.
பெரும்பாலான தாக்குதல்கள் வெறும் பூமி மீது மட்டுமே நடந்திருக்கிறது, அவற்றைச் சரிசெய்துவிட முடியும். அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு கதிர் கசிவு எதுவும் கண்டறியப்படவில்லை” என்றார்.
அமெரிக்காவுக்கு வலுக்கும் கண்டனங்கள்:
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியால் நிறுவப்பட்ட DAWN குழு, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது.
இந்தக் குழு மத்திய கிழக்கில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிக்கிறது. இந்தக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஈரானைத் தாக்கும் ட்ரம்பின் முடிவு சட்டவிரோதமானது. புதிய போர்களிலிருந்து அமெரிக்காவை விலக்கி வைப்பதற்கான அவரது வாக்குறுதி என்ன ஆனது?
எந்தக் காரணமும் இன்றி ஈரான் மீதான ட்ரம்பின் தாக்குதல்கள் சர்வதேச சட்ட மீறல் மட்டுமல்லாமல், காங்கிரஸுக்கு மட்டுமே போரை அறிவிக்கும் உரிமையை வழங்கும் அமெரிக்க அரசியலமைப்பையும் மீறுவதாகும்.
இஸ்ரேலின் கோரிக்கைகளுக்குச் சேவை செய்யும் வகையில் அமெரிக்க நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு போரை ட்ரம்ப் பொறுப்பற்ற முறையில் தொடங்கியுள்ளார். அமெரிக்காவை முதன்மைப்படுத்துவதாக அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறியுள்ளார்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு ஆய்வுகள் மன்றத்தின் இயக்குநர் ஷாஹ்ராம் அக்பர்சாதே, “அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து தொடரும் போர் குறித்து மிகவும் கவலையாக இருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் உரிமை ஈரானுக்கு உண்டு.
அதனால், பல ஈரானின் நட்பு நாடுகளும், பிரதிநிதிகளும் ஈரானின் உத்தரவுக்குக் காத்திருக்காமல், அவர்கள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கச் சொத்துக்களைத் தாக்கும் பொறுப்பை ஏற்கலாம்.
ஏனென்றால், ஈரான் ஆதரவு பிராந்தியத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்கள் உள்ளன” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.