
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் நீரஜ் (ஜிம் சர்ப்). அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ரூ.50 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுப்பதற்காக, முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை ( நாகார்ஜுனா) அணுகுகிறார். அந்த பணத்தை பிச்சைக்காரர்களை பினாமிகளாக மாற்றி, அவர்கள் மூலம் கொடுக்க, தீபக் ஐடியா கொடுக்கிறார். அதற்காக 4 பிச்சைக்காரர்களைத் தேர்வு செய்கிறார்கள். அதில் திருப்பதியில் இருக்கும் தேவாவும் (தனுஷ்) ஒருவர். பணம் கை மாறியதும் பினாமிகளை கொல்லும் நீரஜ் ஆட்களிடமிருந்து தேவா மட்டும் தப்பிக்கிறார். அவரைத் தேடி நீரஜ் ஆட்கள் அலைகிறார்கள். இந்த ஓட்டத்தில் சமீராவின் (ராஷ்மிகா மந்தனா) உதவி தேவாவுக்கு கிடைக்கிறது. தேவா தப்பித்தாரா, இல்லையா? சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் நீரஜ், தீபக் என்ன ஆனார்கள் என்பது கதை.
பிச்சைக்காரர்களை பினாமிகளாக மாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் அதிகார வர்க்கத்தினர் பற்றிய ஒன் லைனை, இயக்குநர் சேகர் கம்முலா சுவாரஸியமாகத் தர மெனக்கெட்டிருக்கிறார். இயற்கை வளத்தை அரசியல்வாதிகளும், கார்ப்பரேட்டுகளும் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர். தன் நலனுக்காக யாரையும் வளைக்கலாம், எவரையும் கொல்லலாம், அவர்களுக்கு அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும் எப்படியெல்லாம் பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதை மிகையில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக எளிய மனிதர்களைக் கையாளும் விதம் பதைபதைக்க வைக்கிறது. முதல் பாகத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகம் வழியாகவே கதை நகர்கிறது. அதை இன்னும் துல்லியமாக செய்திருக்கலாம்.