
ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், “ஈரானுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து கொள்வது குறித்து இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்வார்” என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியாகி இரண்டாவது நாள், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியிருக்கிறது.
‘ஈரானை தாக்கும் முடிவு மீண்டும் அமெரிக்க இராணுவத்தை மத்திய கிழக்கில் தீவிரப் போரில் ஈடுபடுத்தும் அதனால் அதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தவிர்ப்பேன்’ என ட்ரம்ப் உறுதி அளித்திருந்தது, இந்த தாக்குதலின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது.
ட்ரம்ப் பதிவு:
இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் சமூக ஊடகத்தில் “ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துவிட்டோம். எங்களின் அனைத்து விமானங்களும் இப்போது ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளன.
தாக்குதலின் பெரும்பகுதி முதன்மை அணுசக்தி நிலையமான ஃபோர்டோவில் நடத்தப்பட்டது. எங்களின் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்பிவிட்டன. தாக்குதல் நடத்திய சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துகள். இதை அமெரிக்காவைத் தவிர உலகின் வேறு எந்த ராணுவமும் செய்திருக்க முடியாது. இப்போது அமைதிக்கான நேரம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
என்ன நடந்தது?
சனிக்கிழமை அதிகாலை, அமெரிக்க விமானப்படை B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள், மிசோரியிலிருந்து புறப்பட்டு, பசிபிக் பெருங்கடலின் மீது மேற்கு நோக்கிச் சென்றன. இந்த விமானங்கள், “பதுங்கு குழியை அழிக்கும்” என்று அழைக்கப்படும் 30,000 பவுண்டுகள் எடையுள்ள GBU-57 Massive Ordnance Penetrator (MOP) குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட அமெரிக்க விமானங்களில் சில என்பது குறிப்பிடதக்கது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் NBC செய்தியிடம் தெரிவித்திருக்கிறார்.
திரைக்குப் பின்னால்:
இந்தப் போருக்கு அடிப்படை காரணமாக அணு ஆயுத தயாரிப்பு குறித்த அச்சம் இருப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுடன் அமெரிக்க திரைமறைவு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அந்த ஒப்பந்தம் இறுதிவடிவம் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவந்த நிலையில், அதை இஸ்ரேல் விரும்பவில்லை.

அதனால் இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடைக்கும் வகையில்தான் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. போரின் ஆரம்பத்தில் ட்ரம்ப் கூட ”ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கைவிட வேண்டும்” என நெதன்யாகுவிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இஸ்ரேலின் விருப்பம் நிறைவேறும் வகையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ஏற்கெனவே “இந்தப் போரில் அமெரிக்கா ஈடுபட்ட வேண்டாம். எங்களுக்கு ஈரானை விட அமெரிக்காவை தாக்குவது எளிது” என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல் போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.