
தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் கட்டிங் கொடுக்க வேண்டுமெனக்கூறி குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கே.ஆர்.குகேஷ் தாக்கல் செய்திருந்த மனு: தமிழகம் முழுவதும் கனிமவளம் மற்றும் புவியியல் துறையிடமிருந்து முறையான அனுமதி மற்றும் உரிமம் பெற்று மணல், கல், கிராவல் குவாரிகளை நடத்தி வருகிறோம். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ராமச்சந்திரன், குவாரி உரிமையாளர்களிடம் மிரட்டி பணம் வசூலித்து வருகிறார். அரசு புறம்போக்கு நிலத்தில் குவாரி நடத்துபவர்களிடம் 70 சதவீதமும் பட்டா நிலத்தில் கிராவல், மணல் குவாரிகளை நடத்துபவர்களிடம் 40 முதல் 55 சதவீதமும் பணம் வசூலித்து வருகிறார்.