
அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது.
ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர். இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.