
ஹிட் 3 திரைப்பட கதைத் திருட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் நானி மற்றும் திரைப்பட குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹிட் 3 திரைப்படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டது என திரைக்கதை ஆசிரியர் விமல் (எ) விமலவேலன் மனு அளித்துள்ளார்.
நானியின் சமீபத்திய வெற்றிப்படம் தன்னுடைய கதையின் உரிமம் பெறாத தழுவல் என நீதிமன்றத்தில் கூறியுள்ளார் விமல். இது ஆகஸ்ட் 4, 2021 முதல் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஆகஸ்ட் 8, 2022 அன்று, நானியுடன் இணைந்து பணியாற்றும் நோக்கத்துடன் சுருக்கத்தை அவரிடம் சமர்ப்பித்ததாகவும், அதற்கு நானி தரப்பிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவரது மனுவில், ஹிட் 3 வெளியான அன்று அதைத் திரையரங்கில் பார்த்ததாகவும், தனது கதையில் சிறிய மாற்றங்களுடன் அப்படியே எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விமல் தனது அறிவுசார் சொத்துரிமை மீதான மீறலை நிறுத்துமாறு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கு படக்குழு தரப்பில் எந்த பதிலும் இல்லை.
இது குறித்து எழுத்தாளர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கேயும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நீதிமன்றத்தில் ஹிட் 3 படத்துக்கும் தனது கதைக்குமான ஒற்றுமையையும் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.
தற்போது விமல் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடாக படத்தின் லாபத்தில் 20% அளிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார். நானி மற்றும் படக்குழுவினரால் தனக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வாதிட்டுள்ளார்.
லிவ் லா தளம் கூறுவதன்படி, இந்த வழக்கை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம் ஹிட் 3 படக்குழுவினர் அந்த தேதியில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.