• June 21, 2025
  • NewsEditor
  • 0

பலரின் வீட்டுக் கனவை இந்தக் காலத்தில் சாத்தியப்படுத்துவது, ‘வீட்டுக் கடன்’. ‘அது தான் கிடைக்கிறதே’ என்று வீட்டுக் கடனை வாங்கினால், சிக்கலில் மாட்டிக்கொள்வோம். அதனால், வீட்டுக் கடனை வாங்கும்போது, கவனிக்க வேண்டிய எட்டு விஷயங்களை பார்க்கலாம்… வாங்க…

1. வீட்டுக் கடனை வாங்குவதற்கு முன்பு, 20 சதவிகித டவுன் பேமென்டை கையில் வைத்துகொள்ளுங்கள். உதாரணத்திற்கு, ரூ.50 லட்சத்திற்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், அதன் 20 சதவிகிதமான ரூ.10 லட்சத்தை நீங்களே ரெடி செய்துவிடுங்கள். இந்த டவுன் பேமென்டையும் கடன் வாங்குவது நல்லதல்ல.

2. வீட்டுக் கடன் வாங்கும்போது, இரண்டு – மூன்று வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்ப்பது முக்கியம். வங்கிகளுக்கு இடையே இருக்கும் 0.5% – 1% வட்டி வித்தியாசம் கூட கடன் கட்டி முடிக்கும் தொகையை லட்சக்கணக்கில் உயர்த்தலாம். அதனால், இந்த சிறு வித்தியாசங்களையும் கவனிப்பது சிறந்தது.

வீட்டுக் கடன்

3. நீங்கள் மாதா மாதம் கட்டும் இ.எம்.ஐ ஆனது, உங்களது மாத சம்பளத்தின் 30 – 40 சதவிகிதமாகத் தான் இருக்க வேண்டும். அப்போது தான், எந்த சிக்கலும் எழாது.

4. வீட்டுக் கடன் வாங்கும்போது, முடிந்தளவு உங்களுக்கு இருக்கும் வேறு கடன்களை அடைத்துவிடுங்கள். குறைந்தது பெரிய தொகை கடனையாவது அடையுங்கள்.

5. 50 வயதுக்குள் வீட்டுக் கடன் வாங்கிவிடுவது நல்லது. இதைத் தாண்டினால் கடன் கிடைப்பதும் கடினம்… கிடைத்த கடனை நம்மால் அடைக்க முடிவதும் கடினம்.

6. வீட்டுக் கடனுக்கு இன்சூரன்ஸ் எடுத்துகொள்ளுங்கள். எப்போது யாருக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. இந்தச் சூழலில், எதாவது அசம்பாவிதம் நேர்ந்தால், நமது குடும்பம் தான் பாதிக்கப்படும். இதை தவிர்க்கத் தான் இந்த இன்சூரன்ஸ்.

7. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்துவிடுவது நல்லது. குறைந்தது வீட்டுக் கடன் வாங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாவது வருமான வரி தாக்கல் செய்யுங்கள். இல்லையேல், உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

8. வீட்டுக் கடன் காலத்தை 15 – 20 ஆண்டுகாலத்திற்கு நிர்ணயித்து கொள்வது நல்லது. இது சீக்கிரம் கடனை அடைப்பதோடு, நீண்ட கால சுமையாக இருக்காது.

இதையெல்லாம் செய்தாலே, வீட்டுக் கடன் வாங்கி தத்தளிக்காமல் தப்பித்துவிடலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *